===============
பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் விலைமாதர், சைவ, வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்சையான கருத்துகளைக் கூறியதால், அவர் மீது பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து, அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டார்.
இந்நிலையில்,
பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறியுள்ளார். இந்நிலையில்
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று(ஏப். 17) விசாரணைக்கு வந்தது.
அப்போது பொன்முடி பேசியதை திரையிட செய்த நீதிபதி, “பொன்முடி வழக்கில் 5 புகார்கள் பெறப்பட்டுள்ளது. பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு விடியோ ஆதாரம் உள்ளது. வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
பொன்முடியின் பேச்சுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தமிழக டிஜிபி இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.
இதே பேச்சை வேறு யாராவது பேசி இருந்தால் இந்நேரம் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல.” என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார். நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

