திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி ஷண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதி உலா நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
விழாவில் 8-ம்திருவிழாவான நேற்று திருக்கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து திருக்கோயில் சேர்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை (12-ந்தேதி) நடக்கிறது. அன்று காலை 7மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.
11-ம்திருவிழாவான (13-ந் தேதி) தெப்ப திருவிழா நடக்கிறது. 12-ம்திருவிழாவான (14-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
செய்தி தொகுப்பு சுந்தர்..

