தூத்துக்குடி.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தூத்துக்குடி மாவட்ட அளவிலான 2024-25ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு கூடுதல் கலெக்டர் ஊரக வளர்ச்சி ஐஸ்வர்யா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி வரவேற்புரையாற்றினார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரையில் பேசுகையில்: தமிழக முதலமைச்சர் அறிவுரையின்படி மாணவ, மாணவியர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டு, அதன் மூலம் அடையாளம் கண்டு பரிசீலனை செய்து மாணவ, மாணவிகள் மாநில அளவில் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த தொலைநோக்கு பார்வையோடு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் நமது மாவட்டத்தில் 53 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர். திறமை, தன்னம்பிக்கை மூலம் தன்னைத்தானே வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் எந்த விழாவில் கலந்து கொண்டு பேசினாலும், அதில் குறிப்பாக கல்வித்துறையும், மருத்துவ துறையும் தனக்கு இரு கண்கள் என்று கூறுவார். கல்வி வளர்வதன் மூலம் தமிழகத்தில் நல்ல தலைவர்கள் உருவாகி புகழ்மிக்கவர்களாக வர வேண்டும், என்ற எண்ணத்தில் தான் கடந்த ஆண்டு கல்வித்துறைக்கு மட்டும் 44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். 2 ஆண்டு கொரானா காலத்தில் எல்லோரும் சிரமப்பட்ட கலத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் படிப்படியாக மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தி தரமான கல்வியை அரசு பள்ளி மட்டுமின்றி, உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. தமிழகத்தில் புதிய கல்விக் கட்டிடங்கள் கட்டப்பட்டது மட்டுமின்றி பழைய கட்டிடங்கள் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு கல்வித்துறையை முதலமைச்சர் ஊக்குவித்துள்ளார். காலை உணவு திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கல்வித்திறன் கிடைப்பது மட்டுமின்றி பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தாய்மார்களுக்கு சுமை குறைந்துள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு, தற்போது கனடா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, அங்கேயும் செயல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்போடு நின்று விடக் கூடாது என்பதற்காக, உயர்கல்வியையும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முதலமைச்சரின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் எந்த மேல்படிப்பாக இருந்தாலும் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதன் மூலம் தமிழகத்தில் 5 இலட்சம் மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலம் 3½ இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அத்தனை திட்டங்களையும் எல்லாத் துறைகளிலும் முதலமைச்சர் பார்த்து பார்த்து செய்கிறார். தமிழகத்தில் 2297 ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தரமான கல்வி வழங்குவது மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊக்குவித்து வருவதன் மூலம் மாநில அளவில் மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர். தொலைநோக்கு பார்வையோடு எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் கலைத்திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது, என்று பேசினார்.
முன்னதாக நடைபெற்ற கலைவிழா நிகழ்ச்சியை அமைச்சர் கீதாஜீவன் கண்டுகளித்து ரசித்தார்.
விழாவில் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை பொறுப்பு கண்ணன், தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கநிலை பொறுப்பு அன்றோரூபன், கீதாஜீவன் பள்ளிக் கல்லூரிகளின் செயலாளர் ஜீவன் ஜேக்கப், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, சுகாதார குழுத்தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட மருத்துவ அணித்தலைவர் அருண்குமார், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தினி கௌசல் மற்றும் மணி, அல்பட் உள்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியளர்கள், அரசுதுறை அலுவலர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் முனியசாமி நன்றியுரையாற்றினார்.

