தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது.
மேயர் ஜெகன் பெரியசாமி தொடக்க உரையாற்றுகையில்: மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் அனைவருடைய ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டமைப்புகளை முறைப்படுத்தி செய்து வருகிறோம். 206 பூங்கா அமையப் பெற்ற மாநகராட்சியில் 42 பூங்காக்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் பல்வேறு தரப்பினர் ஆரோக்கியமான நடைபயிற்சியோடு பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க நல்ல புதிய பூங்காக்களும் உருவாக்கப்பட்டதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியோடு சென்று வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பராமரிப்பின்றி கைவிடப்படும் நிலையில் இருந்தது, தற்போது அது சீர் செய்யப்பட்டு நன்னீராக்கி விநியோகம் செய்யும் அளவுக்கு வந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தால் கொசுத் தொல்லை குறைந்துள்ளது. தூத்துக்குடி மாநகரில் பொதுவெளியில் குப்பை கொட்டுவதை கண்காணித்து வருகிறோம். இதனை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டுகளில் தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகள் 455 டன் சேகரிக்கப்பட்டது. தற்போது 137 டன் ஆக குறைந்துள்ளது. கடந்த காலங்களில் காற்றின் மாசுபாடு அதிகமாக இருந்தது. தற்போது தருவை குளம் உரக்கிடங்களில் மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்பட்டு மாநகராட்சி பகுதி முழுவதும் மரக்கன்றுகள் நட்டியதால் மாசு குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் நெகிழி கழிவுகள் இல்லாத மாநகராட்சியாகவும், மாசு இல்லாத மாநகராட்சியாகவும் உருவாக்குவதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாகச் செல்லும் முருக பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள முத்தையாபுரம் பாலம் அருகில் ஓய்வுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நான்கு மண்டல பகுதிகளிலும் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு அதில் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட நவீன விளையாட்டு உபகரணங்களோடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சில திட்டங்கள் தனியார் பங்களிப்போடு நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நகராட்சியாக செயல்பட்ட காலத்தில் 1984-85ம் ஆண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள பணியாளர்களுக்கு பணிக்காலத்தில் பணிக்காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வட்டி தொகை 40 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று 78 நபர்களுக்கு வட்டி தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம், என்று பேசினார்.
பின்னர் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுமதிக்கப்பட்ட 64 விளம்பர பலகைகள் நீங்கலாக, மேலும் சில பகுதிகளில் விளம்பர பலகைகள் நிறுவிக்கொள்ள அனுமதிப்பது, 60 வார்டு பகுதிகளிலும் பயன்பாட்டில் இருந்து வந்த 18226 தெரு விளக்குகள், 15வது சிஎப்சி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2887 தெருவிளக்குகள் சேர்த்து மொத்தம் 21759 தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பராமரிக்கும் பணிக்கு தற்காலிக அடிப்படையில் 13 மின் கம்பியாளர், 12 மின் உதவியாளர்கள், 1 ஓட்டுநர் என 26 பேருக்கு தற்காலிக அடிப்படையில் பணியில் நியமித்துக் கொள்வது, துறைமுக விரைவு சாலை பக்தர்கள் ஓய்விட பூங்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், பாளை ரோடு டிஎம்பி காலனி அருகில் உள்ள டோபிகானா வணிக வளாகம், புதிய பேருந்து நிலையம் கடைகளுக்கு உரிமம் ஒப்படைப்பது உட்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி, ஜெயசீலி, சந்திரபோஸ், ரெங்கசாமி, விஜயகுமார், தெய்வேந்திரன், ராமகிருஷ்ணன், கீதாமுருகேசன், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், பவானி, இசக்கிராஜா, முத்துவேல், கனகராஜ் உள்ளிட்டவர்கள் தங்களது பகுதிகளில் செய்த பணிகளுக்கு மேயர், ஆணையருக்கு நன்றி தெரிவித்தும் தங்களது பகுதியில் சாலை வசதி, கால்வாய், பூங்கா பராமரிப்பு, தெருபெயர் பலகை முறைப்படுத்துதல் என அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை முன்வைத்து பேசினார்கள். அதற்கு நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் தங்கள் பகுதி கோரிக்கை குறித்து பேசிய கவுன்சிலர்களுக்கு பதிலுரை வழங்கினார்கள்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பதிலுரை வழங்கி பேசுகையில்: கடந்த காலங்களில் மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் இடுப்பளவிற்கு மழை காலங்களில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல மாதங்களாக வடியாமல் இருந்த நிலையும் இருந்தது. தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரது ஆலோசனையின்படி பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்தியதால் அந்த நிலை தற்போது இல்லை. குடிதண்ணீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் உடைப்பு ஏற்படும் போது அதை சரிசெய்யும் விதமாக பணிகளை மேற்கொள்ளும்போது அப்பகுதியில் சற்று சாலைகள் சேதமடைகிறது. புதிதாக போடப்படும் சாலைகள் அரசு விதிகளின்படி 3 வருடம், 5 வருடம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. அப்படி போடப்பட்ட சாலை பகுதிகளில் அந்த நடைமுறை முடிந்த பின்பு தான் அடுத்த சாலையை அமைக்க முடியும். ஒவ்வொரு பகுதியும் நம்முடைய பகுதியாக நினைத்து மாமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் சுகாதாரத்தையும் பேணி பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். மாநகரை மேலும் அழகுப்படுத்தும் விதமாக சில முக்கிய பகுதிகளில் நமது மாவட்டத்தின் நினைவு சின்னங்களோடு ரவுண்டான அமைக்கப்படுகிறது. போக்குவரத்தை பொறுத்தவரையில் நெரிசல் இல்லாத நிலையை உருவாக்கி அதற்கேற்றாற் போல் புதிய சாலைகள் அமைத்துள்ளோம். இனி வரும் காலங்களிலும் எல்லாப் பணிகளுமே வளர்ச்சிக்கான திட்டங்களோடு அமையும், என்று பேசினார்.
கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, கனகராஜ், சுரேஷ்குமார், சரவணக்குமார், ஜெபஸ்டின் சுதா, ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், சரண்யா, சோமசுந்தரி, மரியகீதா, நாகேஸ்வரி, கண்ணன், பொன்னப்பன், முத்துவேல், பவானி, மெட்டில்டா, காந்திமணி, ராஜேந்திரன், சரண்யா, சோமசுந்தரி, ஜாக்குலின்ஜெயா, தெய்வேந்திரன், சுயம்பு, அதிர்ஷ்டமணி, ராமகிருஷ்ணன், ஜெயசீலி, ரிக்டா, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, பாப்பாத்தி, மகேஸ்வரி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பக கனி, சந்திரபோஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்; முத்துமாரி, மதிமுக கவுன்சிலர் ராமுஅம்மாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், பாலமுருகன், வெங்கட்ராமன், உதவிபொறியாளர்; சரவணன், நகரமைப்புத் திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, ராமசந்திரன், நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், நெடுமாறன், வருவாய்துறை ஆறுமுகம், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

