தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதியிடம் பாஜக கோரிக்கை மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் காசிலிங்கம் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டுவிபுரம் இரண்டாம் நம்பர் தெருவில் இயங்கி வரும் தாலுகா அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தேவையான ஆதார், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பட்டா மாறுதல் இன்னும் பல சான்றுகளுக்கு பல அதிகாரிகளை அணுக வேண்டும்.
அரசாங்கம் பொது மக்களுக்கு இ-சேவை மையத்தில் பதிவு செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்து உள்ளது. ஏழை மக்களை ஏமாற்றி பல இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் தவறான செயலை கூறி உங்களுக்கு உடனடியாக சான்றிதழ் கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி அரசாங்கம் நியமனம் செய்த பணத்தை விட பல மடங்கு பணத்தை வாங்கி பொதுமக்களை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் நேரடியாக செல்ல முடியவில்லை. இடைத்தரகர்கள் மூலம் சென்றால் உடனடியாக கிடைக்கிறது. பொதுமக்களை மிரட்டி இடைத்தரகர்கள் லஞ்சம் வாங்கும் பணத்தை அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கிறார்கள். பொதுமக்களுக்காக அரசு அதிகாரிகள் வேலை செய்யவில்லை. ஆகையால் தாங்கள் நேரடியாக ஆய்வு செய்து தவறு செய்யும் இடைதரகர்கள் மீதும் தவறு செய்யும் அரசு அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

