தூத்துக்குடி.
இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் முக்கிய இடம் வகிக்கிறது. இத்துறைமுகத்திலிருந்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா, ஐப்பான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி – இறக்குமதி நடைபெறுகிறது.
தூத்துக்குடி நகரமானது அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளையும் உள்ளடக்கி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய துறைமுக மாநகரமாக உருவாகி வருகிறது. குறிப்பாக, கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை வசதி, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது
இங்கு தயாராகும் உப்பு, ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாக பெயர் பெற்று விளங்குகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உப்பு வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், ஜவுளி துறை, அனல்மின்நிலையம், கெமிக்கல் நிறுவனங்கள், உரத்தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக வளர்ந்து வருகிறது. தொழில் நகரமாக வேகமான வளர்ச்சியையும் நகர்ப்புற விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகரவளர்ச்சித் திட்ட துறை தூத்துக்குடி நகரைச் சுற்றியுள்ள கிராமங்களை நகர்ப்புற வளர்ச்சித்திட்டத்தில் சேர்த்து நகரத்தின் வளர்ச்சியை முறையாக மேலாண்மை செய்து வருகிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்து போக்குவரத்து வசதிகளும் அடங்கிய மாநகராக தூத்துக்குடி விளங்கி வருவதால், நாளுக்கு நாள் மக்கள் தொகையும் வாகனப் பெருக்கமும் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தூத்துக்குடி வஉசி துறைமுகம் கிரீன் கேட் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கிடையில் பல கோடி மதிப்பில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மிகப் பெரிய பர்னிச்சர் பார்க் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தலைநகரான தூத்துக்குடி மாநகரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நகர்புற கட்டமைப்பு வசதிகளை அனைத்து பகுதிகளுக்கும் செய்து கொடுக்கும் கடமை மாநகராட்சிக்கு உண்டு. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த காலத்தில் எதிர்பாராமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் பல பகுதிகளில் மழைநீரால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவில் அவல நிலை ஏற்பட்டது. அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நிலையில், தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் மழைநீர் பாதிக்கப்பட்ட அதே பகுதியை மீண்டும் பார்வையிட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரிகள் மற்றும் மேயரிடம் இதுபோன்ற நிலை அடுத்து வரும் மழை காலத்திற்குள் பாதிப்பு ஏற்படாதவாறு அதற்கான கட்டமைப்பு வசதிகளை முறையாக செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிய கழிவுநீர் கால்வாய் வசதிகள், சாலை வசதிகள் செய்தும், பக்கிள் ஓடை பகுதியில் அமலைச் செடிகள் அகற்றப்பட்டும் பல்வேறு பகுதிகளில் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் ஆமை வேகத்தில் நடைபெற்றன. வருங்கால தலைமுறையினரின் மக்கள் நலன் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கடமைக்கு பணியாற்றினார்கள். அதனால் தான் தூத்துக்குடி மாநகரில் எதிர்பாராமல் பெய்த கனமழையால் முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர், பிரையண்ட் நகர் என மாநகராட்சியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதே ஓர் காரணம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் திமுக ஆட்சி பொறுப்பேற்று உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடைபெற்ற பின் பொறுப்புக்கு வந்த நாள் முதல் மக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் எவ்வித தொய்வுமின்றி முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, 60 வார்டுகளிலும், கட்சி பாகுபாடின்றி மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம். எதிர்வரும் காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மழைநீர் தேங்காமல் பசுமையான பகுதியாகவும், மாசு இல்லாத மாநகராகவும் உருவாக்கி காட்டுவதே எங்களது இலட்சியம். மற்ற கட்சியினரை போல் கடமைக்கு பணியாற்றாமல் கடமை உணர்வோடு பாரபட்சமின்றி பணியாற்றி வருகிறோம். மேயராக பொறுப்பேற்ற 22 மாத காலத்தில் நாங்கள் செய்த பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஒன்றிய அரசு சார்பில் மாசு இல்லாத மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவில் ஒரு விருதும், மேலும், மாநகராட்சிப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு வளர்ந்து வரும் விஞ்ஞானத்திற்கு ஏற்ப உள்கட்டமைப்புகளை முறைப்படி செய்து கொடுத்த காரணத்தால் மாநகராட்சி முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் வருகை அதிகரித்து தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வித்தரத்துடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் தூத்துக்குடி மாநகராட்சி கல்வியில் சிறந்து விளங்கி வருவதாக ஒன்றிய அரசால் ஒன்றிய அரசால் 3வது இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த விருதையும் பெற்றுள்ளோம். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் தேசிய அளவிலான தூய்மைக் கணக்கெடுப்பு ஸ்வச் சர்வேக்ஷன் 2023-ல், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 29 நகரங்களில் திருச்சி மாநகரம் மாநில அளவில் முதலிடத்தையும் இரண்டாம் இடத்தை தூத்துக்குடி மாநகரம் பெற்றுள்ளது. இதற்காக ஊக்கப்படுத்திய அமைச்சர் கே.என்.நேரு, கழக துணை பொது செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி ஆகியோருக்கும், ஆலோசனை வழங்கிய அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும், உறுதுணையாக இருந்த மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகராட்சி மக்களுக்கும், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள்;, மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வருங்காலங்களிலும் மாநகராட்சி மக்கள் குப்பையை தரம் பிரித்துக் கொடுத்து தூய்மையான தூத்துக்குடியாக விளங்கிடவும் தமிழகத்தில் எல்லா பணிகளையும் நல்லமுறையில் மேற்கொண்ட சிறப்பாற்றிய முதன்மை மாநகராட்சியாக வருவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு தேசிய அளவில் பல விருதுகளை பெற்று வருவதால், தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிற்கே முதன்மை மாநகராட்சியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

