தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய இருதினங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள், கடைகள் மூழ்கின. இதில் 52 பேர் வரை மரணமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மாடு, ஆடு, கோழிகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன. பலர் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். பல பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் பொதுமக்களின் வாழ்வாதாரம் இன்று வரை சீரடையாத நிலையில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு பரிதவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள பகுதியில் கண்மாய்கள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டும், காட்டாற்று வெள்ளமும் இணைந்து ஒரே நேரத்தில் பாய்ந்து வந்ததால், அதன் கோரத்தாண்டவத்தால் தூத்துக்குடி மாநகராட்சி முழுவதையுமே புரட்டி போட்டு விட்டது. இன்று வரை அப்பகுதியில் உள்ள வெள்ளநீர் அகற்றுவதற்கு கூடுதல் மின்மோட்டார்கள் வைக்கப்பட்டு பல இடங்களில் தற்காலிகமாக சாலை தோண்டப்பட்டும், பைப் மூலமும் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாதி வடிந்த நிலையில், மற்றப் பணிகளும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதலமைச்சர் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கியும், ஆடு, மாடு, வீடு இழந்தவர்களுக்கான இழப்பீடு தொகையையும், உயிரிழந்தவர்களுக்கான வெள்ள நிவாரண தொகையையும் அறிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு நேரில் வந்து மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி, தமிழக அரசை பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், உதயகுமார் எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் முகாமிட்டு, பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தென்மண்டல துணை செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடாவுமான வக்கீல் மந்திரமூர்த்தி கூறுகையில்: ஏற்கனவே வானிலை ஆராய்ச்சி மையம் தென் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் வெளியிடப் பட்டிருந்தும், மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அதன் விளைவாக ஆராய்ச்சி மையம் அறிவித்தபடியே மிக கனமழை பெய்ததால் கரைபுரண்டு ஓடிய மழை வெள்ளம் பலருடைய இல்லத்தையும் சூழ்ந்து மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாநகராட்சி 51வது வார்டு பகுதியான இந்திராநகர், திருவிக நகர், ஜே.ஜே.நகர், எஸ்.எஸ்.நகர், காதர்மீரான்நகர், பெரியசாமிநகர், ஊரணி ஒத்த வீடு, முடுக்குகாடு, வீரநாயக்கன் தட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இதை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக அப்புறப்படுத்தாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இப்பகுதிகள் அனைத்தும் அதிமுக மாமன்ற உறுப்பினர் வார்டு பகுதிக்குள் அமைந்துள்ளதால் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்பட்டு முறையாக பணியாற்றவில்லை. அதிமுக சார்பில் பல்வேறு பணிகளை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழிகாட்டுதலின்படி பணிகளை மேற்கொண்டோம். இப்பகுதிக்கு முழுமையான நிவாரணங்களும் இறந்த ஆடு, மாடுகள் மற்றும் சேதமடைந்த வீடுகள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு உரிய இழப்பீட்டு தொகையை அரசு வழங்க வேண்டும், என்று கூறினார்.

