தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த அதிக கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளும், நிவாரணப் பணிகளும் மற்றும் கணக்கெடுப்பு பணிகளும் முதலமைச்சர் உத்தரவின்பேரில், அமைச்சர் பெருமக்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் இரண்டாவது நாளாக காலாங்கரை கிராமம் கோரம்பள்ளம் கண்மாய் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
மழைவெள்ளத்தால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோரம்பள்ளம் ஏரி மாதிரி கிட்டத்தட்ட தாமிரபரணி ஆறு, குளங்கில் 750 உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் சரிசெய்வதற்கு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் அனைத்து மறுசீரமைப்பு பணிகளையும் கடந்த 2 நாட்களாக பார்வையிட்டு வருகிறோம்.
தற்போது வரை 50 சதவீதத்திற்கு மேல் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் முழுமையாக சரிசெய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தால்தான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும்போது அதன்மூலம் இந்த குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்புவதன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.
கனமழையினால் ஏற்பட்டுள்ள அனைத்து சேதங்களையும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் மூலம் போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அனைத்து சேதங்களையும் கணக்கெடுப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள சிறப்பு பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகள் 3 நாட்களுக்குள் முடிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்தவுடன் முதலமைச்சர் அறிவித்த நிவாரணத்தொகை பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தாழ்வான தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரை 200 பம்ப்கள் மூலம் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தெருக்களில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள், மரங்களை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது. நேற்றைய கணக்கெடுப்பின்படி சுமார் 3500 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.
மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சாலை வசதி, பால் மின் விநியோகம் உள்ளிட்டவை பெரும்பாலான இடங்களில் செய்து தரப்பட்டுள்ளன. சென்னையில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சரிசெய்வதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள சுமார் 175 உடைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் 150 உடைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் உடைப்புகளும் சரிசெய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. கனமழையினால் ஏற்பட்டுள்ள பல்வேறு சேதங்களை சரிசெய்யும் மறுசீரமைப்பு பணிகளில் அரசு பணியாளர்கள் ஓய்வின்றி இரவு பகல் பாராமல் மக்களுக்காக பணி செய்து வருகிறார்கள் என தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்தார்.
ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கலெக்டர் லட்சுமிபதி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

