தென்மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டமே. அதிகளவு பெய்த மழையினால் குளங்கள் நிரம்பியும், பெரும்பாலான குளங்கள் உடைந்தும், சாலைகள் சேதமடைந்தும், ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சிறப்பு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு உறுதுணையாக தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் தங்கள் குடும்பநலனை மறந்து வெள்ள சேதத்தின் போது வெள்ளத்தில் தங்களது குடும்பத்தை தவிக்க விட்டு விட்டு மக்கள் நலன் கருதி பாத்திக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தில் எங்கெங்கு சிக்கி இருக்கிறார்கள் என்று அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உரிய நேரத்தில் தகவல்கள் தெரிவித்த காரணத்தினால் பல விலைமதிக்க முடியாத உயிர்கள் காக்கப்பட்டன. மேலும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் அமைச்சர்கள், மேயர் சார்பிலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வரலாறு காணாத மழைப் பொழிவினால் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளக்காடானது மட்டுமின்றி 6 நாட்களாக மக்கள் தங்கள் அன்றாட தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.
மழை வெள்ளத்தால் ஒருபக்கம் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட செய்தி பரவலாக தெரிந்தாலும், பத்திரிக்கையாளர்களின் நிலைமை வெளிச்சத்திற்கு வராமலேயே உள்ளது.
மழை பொழிவு குறித்த செய்திகளை உடனுக்குடன் நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதில் பத்திரிகையின் பணி அளப்பறியது. அரசின் அவசர கால அறிவிப்புகளை கடைகோடி மக்களுக்கு பத்திரிகை, ஊடகம், இணையதளம் வாயிலாக கொண்டு சென்றதில் பத்திகையாளர்கள் அரசுக்கும், அரசியல்கட்சியினருக்கும் முதன்மையானவர்களாக திகழ்கிறார்கள்.
தங்கள் இன்னுயிரையும் துச்சமென மதித்து வெள்ளநீர் பாய்ந்தோடி வருவதை பொருட்படுத்தாமல் ஓடோடி சென்று செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் பலர் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பொருட்கள் பாதிப்படைந்த நிலையிலும், சிலர் கார்கள், இருசக்கர வாகனங்கள் முழுமையாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளிதழ், தொலைக்காட்சி, பருவ இதழ்கள் ஆகியவற்றில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கும் தூத்துக்குடி எம்.பி.யும், மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள், மேயர் ஆகியோர்கள் உதவி செய்திட வேண்டும். மேலும் அந்தந்த சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த எம்எல்ஏக்கள், அவர்களுடைய தொகுதியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்திட வேண்டும். வெள்ள சேதத்தின் போது வழக்கமான பணிகளை செய்து விட்டு பத்திரிகையாளர்களை மறந்து கடந்து செல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்பு கலந்த நட்புடன்
த.சண்முகசுந்தரம்,
செய்தியாளர்
தூத்துக்குடி முன்னாள் பிரஸ் கிளப் தலைவர்

