தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார்.
மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தூத்துக்குடி மாநகரத்தில் கடந்த ஓராண்டுகளாக பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகிறோம். மழைக் காலங்களில் மழை நீர் தூத்துக்குடி நகரில் எங்கும் தேங்காத அளவிற்கு தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து பார்த்து உத்திரவிட்டதின் பேரில் கடந்த ஆண்டு முதல் சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மேலும், பாதாள சாக்கடை பணிகள் முழுமையடையும் தருவாயில் உள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதை மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்த பணிகள் நடந்து வருகிறது. மேலும், ராஜகோபால் நகர், நிகிலேசன் நகர் பகுதியில் ஒரு சில வீடுகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. பல காலி மனையாக இருப்பதால் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த இடத்தின் உரிமையாளர்களை கண்டுபிடித்து மணல் அடித்து உயரமாக்க வற்புறுத்தி வருகிறோம். இல்லை என்றால் மாநகராட்சி மூலம் அந்த பணிகள் செய்யப்பட்டு அவர்களிடம் பணம் வசூலிக்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி முழுமையாக பணிகள் நடைபெறும். ஆக்கிரமிப்புகள் கவுன்சிலர்களின் ஒத்துழைப்போடு அகற்றப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
கூட்டத்தில் அதிமுக கொறடா வழக்கீல் மந்திரமூர்த்தி பேசுகையில்: தூத்துக்குடி மழைக்காலமாக இருப்பதால் பட்டா இடங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு கொசு உற்பத்தி ஆகி பல்வேறு நோய்களை உருவாக்கி வருகிறது. இதனால் அந்த பட்டா இடங்களில் மாநகராட்சி சட்ட விதிகளின்படி நிர்வாகம் அங்கு தண்ணீர் தேங்காத அளவுக்கு மணல்களை அடிக்க வேண்டும். இதற்கான தொகையை அந்த உரிமையாளர்களிடம் வசூல் செய்து கொள்ளலாம்.
மேலும், டெங்கு காய்ச்சல், ஒருவித மர்ம காய்ச்சல் தூத்துக்குடியில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. இதை தடுப்பதற்கு கொசு மருந்து அடித்து ப்ளீச்சிங் பவுடர்களை தெருத் தெருவாக போட வேண்டும். மேலும், தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலையான முத்தையாபுரம் முள்ளக்காடு வரை உள்ள ரோடுகளில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்து கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த மாடுகளை அப்புறப்படுத்த கோரி பல தடவை கூட்டத்தில் பேசியும் இதுவரையும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதிகளில் நாய் தொல்லைகளும் அதிக அளவில் உள்ளது. இதனால் நாய்களை பிடித்து ஊசிகள் போட வேண்டும் என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது: ஆணையர் அவர்கள் மழை காலம் முடியும் வரை சுகாதார பணியாளர்களை அதிக அளவு வேலை வாங்கி வருகிறார். தண்ணீர் தேங்காத அளவுக்கு உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை விரைந்து நடவடிக்கை எடுத்து பணியாற்றுகிறார்கள். டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை தடுப்பதற்கு தினசரி சுகாதாரத்துறை மூலம் 15க்கு மேற்பட்ட முகாம்கள் நடத்தி வருகின்றோம். இது நாள் வரை டெங்கு பாதிக்கப்பட்டதாக ஒருவர் கூட பதிவு செய்யவில்லை. இருந்தாலும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் மாடுகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
கூட்டத்தில், திமுக கவுன்சிலர் ரெக்ஸ்லின் பேசுகையில்: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மாநகராட்சியை சீரழித்து குட்டிச் சுவராக்கி விட்டனர். திமுக ஆட்சி வந்த பிறகு அதிலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பிறகு எல்லா பணிகளும் சிறப்பாக நடைபெறுகிறது. கடந்த காலத்தில் தூத்துக்குடி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தாண்டு அந்த நிலை இல்லாத வகையில், எங்களை வழிநடத்தும் தமிழக முதலமைச்சருக்கும், சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர்களை ஒட்டுமொத்த கவுன்சிலர்கள் சார்பில் மனதார பாராட்டுகிறேன் என்று பேசினார். பின்;னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கவுன்சிலர் மும்தாஜ், திமுக கவுன்சிலர் மரிய கீதா, சுதா, மெட்டில்டா, மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கந்தசாமி, பட்சிராஜ், விஜயகுமார், ராஜதுரை, மதிமுக கவுன்சிலர் ராமுத்தம்மாள், ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கண்ணன், சரவணக்குமார் ஆகியோர் மேயர் மற்றும் ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதை தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மண்டல தலைவர் அன்னலெட்சுமி, கம்யூனிஸ்;ட் கவுன்சிலர் தனலெட்சுமி, முத்துமாரி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், கீதாமுருகேசன், ரெங்கசாமி, சரண்யா, சோமசுந்தரி, பேபி ஏஞ்சலின், ஜாக்குலின் ஜெயா, ஜான்சிராணி, முத்துவேல், அதிஷ்டமணி, அதிமுக கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், விஜயலெட்சுமி மற்றும் துணை ஆணையர் ராஜாராம், செயற்பொறியாளர் பாஸ்கரன், பொறியாளர் சரவணன், துணை பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், நகர் நல அலுவலர் சுமதி, நகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி ஆணையர்கள் ராமச்சந்திரன், சந்திரமோகன் தனசிங் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகனேஷ், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

