தூத்துக்குடி,
தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் 364 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு முதலமைச்சரின் உயரிய திட்டமான சைக்கிள் வழங்கும் திட்டம் இருந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராம புற மாணவ-மாணவி பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்த பள்ளிக்கென்று ஒரு பெருமை உண்டு. நல்ல சீருடையுடன் ஒழுக்கமாக படித்து, எந்த போட்டி தேர்வாக இருந்தாலும் அதில் ஈடுபாடுடன் பங்கேற்று வெற்றி பெறுகிறீர்கள். பள்ளி படிப்பு நமக்கு முக்கியமான கால கட்டம். தன்னம்பிக்கையுடன் கல்வியை கற்று அறிவுத்திறனையும் பெற்று இந்த சமுதாயத்திற்கு மட்டுமின்றி நாட்டிற்கும் உங்கள் வீட்டிற்கும் நன்மை கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும். இங்கு படிக்கின்ற மாணவிகள் கல்லூரி படிப்பையும் பயின்று, பல்வேறு உயர் பதவிகளுக்கு வர வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு கல்வியும் மருத்துவ துறையும் இரண்டு கண்கள் என்று பல விழாக்களில் அவர் பேசியுள்ளார். நாட்டின் எதிர்கால தூண்களாக விளங்கக்கூடிய உங்களை மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தினி கௌசல், பள்ளிச் செயலாளர் முரளி கணேசன், பள்ளி இயக்குநர் லெட்சுமி ப்ரீத்தி, மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி, பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை ஆய்வு மேற்கொண்டார்.

