தூத்துக்குடி,
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடி ஏபிசிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார்.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டன. அதில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். ஓவியப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பரிசு வழங்கி பேசுகையில்: தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி மாநகராட்சி முழுவதும் தூய்மையான நகரை உருவாக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு முக்கியமான நகரங்களிலும் மாசு பற்றிய தகவல்கள் கணக்கெடுக்கப்பட்டு தெரிவிக்கப்படும். அதில் நமக்கு ஒரு சவாலாக இருந்தது. மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் நிறைந்த நான்கு கட்டமைப்புகள் உள்ள நகரமாக விளங்கும் தூத்துக்குடியில் அதையெல்லாம் போக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 70 ஆயிரம் மரக்கன்றுகளும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாளையொட்டி 60 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டு, மாநகர் பகுதி முழுவதும் எங்கெல்லாம் தேவைப்படும் இடம் இருக்கிறதோ, அங்கெல்லாம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பல பள்ளிகளும் அடங்கும். மாநகர மக்கள் சுத்தமான சுகாதாரமான காற்றை சுவாசிக்கும் வகையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் இடங்களில் மரக்கன்று நட வேண்டும் என்றால் அதையும் வழங்கி தினசரி மாநகராட்சி சார்பில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. கடந்த காலங்களில் பெய்த மழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஆனால் இந்தாண்டு பெரிய அளவில் பாதிப்பில்லை. கடற்கரை பகுதியிலும் சில தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. பல்வேறு நடவடிக்கையின் மூலம் உடனடியாக மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 8 மாத காலமாக அந்த பணி நடைபெறுகிறது. கோரம்பள்ளத்தில் இருந்து தூத்துக்குடி மாநகருக்கு கொண்டு வரப்பட்ட பக்கிள் ஓடை திட்டம் மழை காலத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவு பெறாத காரணத்தால், பக்கிள் ஓடையும் சீர்கெட்டது. தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணியில் தினமும் 1000 பேர் அதிகாலை 5 மணி முதல் பணியாற்றி தினமும் 150 டன் குப்பைகளை அனைத்துப் பகுதிகளிலும் சேகரிக்கின்றனர். அதை உரக் கிடங்கு உள்ள 588 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை தனியார் தொழிற்சாலைக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக, மீன் மார்க்கெட் பகுதிகளில் அதிகளவில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துகிறார்கள். அதையும் 90 சதவீதம் முறைப்படுத்தி விட்டோம். 3 வேளையும் நாம் உணவருந்துவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையோடு வாழ்கிறோம். அதேபோல், மாசு இல்லாத மாநகராட்சி உருவாக வேண்டும் என்பதில் உங்களுக்கும் அக்கறை இருக்க வேண்டும். நானும் ஒருகாலத்தில் வாகனத்தில் செல்லும்போது, உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு, சாலையில் வீசி விட்டுச் செல்வேன். இப்போது, அதன் பாதிப்பை எல்லாம் தெரிந்து கொண்ட நான் உணர்ந்து கொண்டேன். எதிர்கால தலைமுறையினராகிய நீங்கள் நமது நகரம் – நமது தூய்மை என்பதை கடைப்பிடிக்க வேண்டும். நெகிலி கழிவுகளை தவிர்க்கும் பொருட்டாக மஞ்சள் பை உபயோகப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பல லட்சம் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையை போல் எதிர்காலத்தில் வளர்ச்சியடைந்த பெரிய மாநகரமாக தூத்துக்குடி உருவாகும் நிலை வரும். நாம் அனைவருமே இணைந்து மாசு இல்லாத மாநகரை உருவாக்க பாடுபட வேண்டும் என்று பேசினார்.
விழாவில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, பள்ளியில் தாளாளர் கணபதி, பள்ளி முதல்வர் கோமதி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜோஸ்பர் உள்பட பல்வேறு பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி நன்றியுரையாற்றினார்.

