தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பி.எண்.டி காலனி 12வது தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, ராஜீவ்நகர், கதிர்வேல் நகர், நிகிலேசன் நகர், பால்பாண்டிநகர் மற்றும் மில்லர்புரம் ஹவுசிங் போர்டு ஆகிய பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு மழை நீர் தேங்கிய பகுதிகளில்;; நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: மாநகர பகுதிகளில் ஏற்கனவே சாலை மற்றும் வடிகால் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். தற்போது மீதமுள்ள பகுதிகளிலும் வரும் நாட்களில் பணிகள் விரைந்து நடைபெறும் என்று உறுதியளித்தது மட்டுமின்றி, தனிநபர் இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தால், அந்த பள்ளங்களை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளும்படி மாநகர மக்களை கேட்டுக்கொள்கிறேன், என்று தெரிவித்தார்.
உடன் மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் இராஜா மற்றும் ஜோஸ்பர் பிரபாகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

