தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட பாரதிநகரில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டு மழை நீர் தேங்கிய பகுதிகளில் மழையில் நனைந்தபடி அப்பகுதியில் நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் மணி, பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

