தூத்துக்குடி.
தூத்துக்குடியில் சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. சிவன் கோயில் தேரோட்டத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த அக்டோபர் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலையில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 07.11.2023 காலை நடந்தது. காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் கரகோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். கீழ ரதவீதியில் இருந்து தேர் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன்பாக சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய வேடமணிந்து சிறுவர், சிறுமியர் நடனமாடினர். ஒயிலாட்டம், வாள் சுருள், களியல் ஆட்டம், மயிலாட்டம், குதிரை ஆட்டம், ராஜ மேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உருமி மேளம், சிவபூதனை வாத்தியங்களுடன் தேவார இன்னிசையுடன் சிலம்பாட்டம் ஆடியபடியே சென்றனர். இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.

தேரோட்ட நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்செல்வி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மேலூர் பத்திரகாளியம்மன் குழு தலைவர் கீதா செல்வ மாரியப்பன், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதா முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, தொழிலதிபர்கள் கமலஹாசன், தெய்வநாயகம், சந்திரசேகர், சிவன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, பாலசங்கர், ஜெயபால், மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மஞ்சுளா, கவுன்சிலர் பொன்னப்பன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், திமுக வட்டச்செயலாளர் கங்கா ராஜேஸ், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, மற்றும் கருணா, மணி, அசோக் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்தனர். வருகிற 9ஆம் தேதி திருக்கல்யான வைபம் நடைபெறுகிறது.

