தூத்துக்குடி.
தூத்துக்குடி திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழிமுறைக்கு இணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக பாலு, துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி உள்ளிட்ட உயர்மட்ட முக்கிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின் திமுகவின் கட்டமைப்பு படி 23 அணிகள் முறையாக செயல்படுகின்றன. அதற்கும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இளைஞரணி பொறுப்பை வழிநடத்தி 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும் முதன்மை அணியாக செயல்படுவது இளைஞரணி தான். திமுக கட்சியின் கொள்கைகளை தீவிரமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பில் இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் கழக பொறுப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவில் பணியாற்றியதையும், கழகம் அறிவித்த போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட விவரத்தையும் கேட்டறிந்து, குறிப்பாக அவர்களில் தீவிர களப்பணி ஆற்றுபவர்கள் யார் என்பதை கண்டறியப்பட்டு, அதில் துடிப்புடன் செயல்படும் நிர்வாகிகள் பட்டியலை தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக திமுக வர்த்தக அணி மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் வெளியிட்டார்.
இதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைவர் எஸ்.பி.ஜெ.சுந்தரராஜன், துணை தலைவர் ராஜசேகர், அமைப்பாளர் ஆர்.ரங்கநாதன் (எ) சுகு, துணை அமைப்பாளர்களாக ரெங்கசாமி, ரவி, முத்துக்குமார், இசக்கிமுத்து, சேர்மதுரை, ராமு (எ) ராமநாதன், செல்வகுமார், ராஜசேகர், ஏ.குமார், பிலோமின்ராஜ், செல்வின், அருள், மாடசாமி, மகாலிங்கம், ராகுல், செல்லத்துரை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ரெங்கசாமி தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும், மாநகராட்சி கணக்கு குழு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதனையடுத்து தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதிய நிர்வாகிகளிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில்: தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வர்த்தக அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார், அரசு வழக்கறிஞர் பூங்குமார் மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

