தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சிவந்தாகுளம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு தேவையான 100 ஸ்மார்ட் பெஞ்ச்களை முதற்கட்டமாக மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி கூறுகையில் கூடுதல் வகுப்பறைகளில் தற்போது ஸ்மார்ட் பெஞ்ச்கள் போடப்படுகின்றன. இதன்மூலம், பள்ளிகளின் தரமும் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் வருங்காலங்களில் அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் இது போன்று வழங்கப்படும் என்றார்.
நிகழச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகராட்சி பொறியாளர் சரவணன், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சந்திரபோஸ், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் பொன்ராஜ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பத்திரம் மற்றும் பட்டா இல்லாத மக்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கில், சில நிபந்தனைங்களுடன் சொத்து வரி நிர்ணயம் செய்து குடிநீர் இணைப்புகளை மேயர் ஜெகன் பெரியசாமி இதற்கான ஆணையை பொதுமக்களிடம் வழங்கினார். சுமார் 200க்கும் மேற்பட்டோர் பயனடையவுள்ளனர்.

தொடர்ந்து, மாநகராட்சிக்குட்பட்ட ஜெயராஜ் சாலை, எட்டையாபுரம் சாலை ஆகியவற்றை இணைக்கக்கூடிய சாலை பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதனை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடுவது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடும்போது, அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். தொடர்ந்து பணிகள் முடிவடைந்த இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் திறப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டுக்குட்பட்ட, தோப்பு தெரு – வரதவிநாயகர் கோயில் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு மற்றும் ஆனந்தநகர் ஆகிய பகுதிகளில் புதியதாக சாலை மற்றும் வடிகால் வசதி செய்து கொடுத்ததற்கும், தேசிய அளவில் சிறந்த கல்வியை வழங்குவதற்காக தூத்துக்குடி மாநகராட்சி மூன்றாம் இடம் பெற்றதற்கு மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

