தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேற்கே அமைந்துள்ள பொன்னாங்குறிச்சியில் இருந்து வரும் தாமிரபரணி தண்ணீரை மேல ஆத்தூர், மஞ்சள்நீர்காயல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொடுத்து பல்வேறு ஊர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை, அகரம், மாரமங்கம், முக்காணி, பழைய காயல் உள்ளிட்ட பகுதியில் தற்போது கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சள்நீர் காயல் சுத்திகரிப்பு நிலையம் போலவே, வாழவல்லான் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கி ஆண்டு கொற்கை, அகரம், மாரமங்கலம், முக்காணி பழைய காயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் நீர் வழங்க வேண்டுமென நேற்று (12/09/2023), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களிடம் அதிமுகவைச் சேர்ந்த உமரி காடு ஊராட்சி தலைவர் ராஜேஷ்குமார் (ஊராட்சி தலைவர்கள் மாவட்ட கூட்டமைப்பு) மற்றும் எட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் குடிநீர் பிரச்சனை குறித்து கோரிக்கை கொடுத்தார்.
இந்த நிலையில், இன்று (13/09/2023) குறிப்பிட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரில் சென்ற கனிமொழி கருணாநிதி அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார். புதிய குழாய்கள் ஒரு மாதத்திற்குள் அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்த அதிகாரிகள். குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் குழாய்களை மாற்ற ஒரு மாதம் காலம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது குடிநீர் பிரச்சினை தீர சுற்று வட்டார கிராமங்களுக்கு தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

