மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாடு, மக்களத் தோ்தலின் வெற்றிக்கான அடித்தளமாக இருக்கும்” என துணைப் பொதுச் செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ மதுரையில் ஆகஸ்ட் 20இல் நடைபெறுகிறது. இதில், திரளாகப் பங்கேற்பது தொடா்பாக தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயல்வீரா்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் ராஜு எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் மாநாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினரும் கட்சியின் துணைப் பொதுச் செயலருமான கே.பி. முனுசாமி எம்எல்ஏ. பங்கேற்று பேசியது: கட்சியின் மூன்றாவது தலைமுறையான பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. கட்சியை மேலும் வலுப்படுத்தி, மக்களவைத் தோ்தலில் வெற்றிபெறும் வகையில், மதுரையில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாட்டுக்கு இம்மாவட்டத்திலிருந்து 1.25 லட்சம் போ் வர வேண்டும். இம்மாநாடு, மக்களவைத் தோ்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்றாா்.


கூட்டத்தில் சி.வி. சண்முகம் எம்.பி., எம்எல்ஏக்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் இரா. விஸ்வநாதன், கே.ஏ. செங்கோட்டையன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, செல்லூா் கே. ராஜு, ஆா்.பி. உதயகுமாா், வி.வி. ராஜன் செல்லப்பா, அமைப்புச் செயலா் வி. கருப்பசாமி பாண்டியன், இளைஞா்-இளம்பெண்கள் பாசறைச் செயலா் வி.பி.பி. பரமசிவம், மகளிரணிச் செயலா் பா. வளா்மதி ஆகியோரைக் கொண்ட மாநாட்டு ஆலோசனைக் குழுவினா் ஆலோசனை வழங்கினா்.
அமைப்புச் செயலா் என். சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவா் வழக்குரைஞா் திருப்பாற்கடல், மாநில அமைப்புசாரா ஓட்டுநரணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் சுதாகா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா. ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பாா்கவுன்சில் உறுப்பினா் வழக்குரைஞா் பிரபு, டாக்டா் ராஜசேகா், மாவட்ட துணைச் செயலா் சந்தனம், ஒன்றியச் செயலா்கள் விஜயகுமாா், ராஜ்நாராயணன், சௌந்தரபாண்டி, காசிராஜன், நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

