தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 48 காவல்நிலையத்திற்கு மேல் உள்ளது. அதில் குறிப்பாக, தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் ஒரு சென்சிடிவ் ஆன பகுதியில் அமைந்துள்ள காவல்நிலையம் ஆகும்.
தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் தென்பாகம் காவல்நிலையம் இருப்பதாலும், பழைய பேருந்து நிலையம், மாவட்ட நீதிமன்றம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராஜாஜி பூங்கா, தாலுகா அலுவலகம் போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் அருகில் இருப்பதாலும், நாள்தோறும் பரபரப்பாக இயங்கி வரும் காவல்நிலையமாக விளங்கி வருகிறது.
பல்வேறு குற்றச்சம்பவங்கள் தென்பாகம் காவல்நிலையம் எல்கைக்குள் அதிகமாக முன்பு நடந்து வந்ததால் அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த காவல்நிலையத்திற்கு புதிய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நியமனம் செய்யும்போது அதிரடி அதிகாரிகளையும், நேர்மையான அதிகாரிகளையும் நியமிப்பது வழக்கம். அதன்படி தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய ஆய்வாளராக ராஜாராம் நியமிக்கப்பட்டார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளராக ராஜாராம் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பகுதியில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை வெகுவாக குறைத்து வருகிறார்.
காவல்நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை கனிவுடன் நடத்தி, அவர்களை சிறப்பாக பணியாற்ற வழிநடத்துவதால் அங்குள்ள காவலர்களும் ஆர்வமுடனும் மகிழ்ச்சியுடனும் பணியாற்றி வருகிறார்கள்.
‘இருக்கும் இடமே கோயில். செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற நோக்கத்தோடு, ஆய்வாளர் ராஜாராம், சட்டஒழுங்கு பிரச்சனையில் காட்டும் அக்கறையோடு தாங்கள் பணி செய்யும் இடமும் பொலிவுடன் காணப்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு, காவல் நிலைய வளாகத்தையும், காவல் நிலையத்தையும் சுத்தமாக பராமரித்ததோடு வழக்கு தொடர்பான ஆவணங்களையும் முறையாக பராமரித்தார். புகார் மனுக்கள் வழங்க வரும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், நாற்காலிகள் மற்றும் வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வiயில் பந்தல் அமைத்து கொடுத்தும்; மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார். காவல்நிலையம் வரும் பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்க வரவேற்பாளருக்கு ஆலோசனைகளையும் வழங்கியள்ளார். இதனால் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் நல்லுறவை ஏற்படுத்தி, போலீஸ் உங்கள் நண்பன் என்ற கோட்பாடை தென்பாகம் காவல்நிலையத்தில் நிலை நிறுத்தியுள்ளார்.
இந்த காவல்நிலையத்தில், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அறையில் டேபிள், நாற்காலி, தரைதளம் உடைந்தும், நீண்ட நாட்களாக பெயிண்ட் அடிக்காமலும் போதிய பராமரிப்பு இன்றி இருந்த நிலையில், அதனை முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்க முடிவெடுத்த ஆய்வாளர் ராஜாராம், சக காவலர்களுடன் இணைந்து, கடந்த 4 மாதங்களாக தீவிரமாக பணியாற்றி தென்பாகம் காவல்நிலையத்தை சீர்மிகு காவல்நிலையமாக மாற்றிக்காட்டி உள்ளார்.
இந்நிலையில் மாவட்டத்தில் மற்ற காவல்; நிலையங்களில் இருந்து தனித்து சிறப்பாக செயல்பட்டு வந்த தென்பாகம் காவல்நிலையத்திற்கு எஸ்.பி.பாலாஜி சரவணன் விசிட் அடித்தார்.


தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மேற்படி காவல் நிலைய போலீசாருக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
பின் தென்பாகம் காவல் நிலையத்தை புதுப்பித்து புதுப்பொலிவுடன் சுத்தமாக பராமரித்து வைத்திருந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீசாரை பாராட்டியும், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் இதுபோன்று சுத்தமாக வைத்து பராமரிக்குமாறு அனைத்து காவல் ஆய்வாளர்களையும் அறிவுறுத்தியுள்ளார். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
ஆய்வின்போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் உடன் இருந்தார். தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர் சிவக்குமார், கங்காதர பாண்டியன், பயிற்சி உதவி ஆய்வாளர் ராமலெட்சுமி உட்பட காவலர்கள் அனைவரையும் எஸ்.பி. பாலாஜி சரவணன் உற்சாகப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பது, தூய்மையான காவல் நிலைய வளாகம் அமைத்தது, ஆவணங்களை முறையாக பராமரித்து வருவது உட்பட இன்னும் பல்வேறு சிறப்புகளை பெற்றிருந்ததால், சென்னையில் பூக்;கடை காவல்நிலையமும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், பிரம்மதேசம் ஆகிய காவல் நிலையங்களும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றுள்ளது.
அதன் வரிசையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென்பாகம் காவல்நிலையம் அனைத்து சிறப்புகளையும் பெற்றிருப்பதால், ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற தகுதி வாய்ந்த காவல்நிலையமாக திகழ்கிறது என அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.
மற்ற காவல்நிலையங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வரும் தென்பாகம் காவல்நிலையம் போல் அனைத்து காவல்நிலையமும் அப்டேட் ஆகும் பட்சத்தில் தமிழக காவல்துறையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முத்திரை பதிப்பது உறுதி.
செய்தி தொகுப்பு: எம். ஆத்திமுத்து
போலீஸ் செய்தி நியூஸ்

