தூத்துக்குடி
தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருடந்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
விஷேச நாட்களான தைபூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுவதை ஆண்டாண்டு காலமாக வழக்கமாக கொண்டுள்ளனர்.
திருச்செந்தூருக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் பாதசாரி பக்தர்கள் இரவு நேரங்களில் தங்கி ஓய்வு எடுப்பதற்கு போதிய இடவசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை போக்கும் வகையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டுமென்று முருக பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த பலர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட மேயர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் எங்கெல்லாம் இருந்து வருகிறது. அதை யாரெல்லாம் அபகரித்து வைத்திருக்கிறார்கள் என்ற பட்டியலை கையில் எடுத்தார். அப்போது, முத்தையாபுரம் உப்பாத்து ஓடை பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் 2 ½ ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகளுடன் சென்று அந்த இடத்தை மீட்டு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த இடத்தில் முருக பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் வைத்த கோரிக்கையை ஏற்று பக்தர்கள் தங்குவதற்கும், குளிப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும் மற்றும் பூங்காக்கள் அடங்கிய அடிப்படை வசதிகள் அனைத்தும் பல்வேறு கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டு, மேலும் இரு கடைகளும் அமைக்கப்படுகிறது. இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்ததாரரிடம் நல்லமுறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கவுன்சிலர்கள் முத்துவேல், பட்சிராஜ், சுயம்பு, விஜயக்குமார், ராஜதுரை, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜோஸ்பர், பிரபாகர் உள்பட மாநகராட்சி அரசு துறை சார்ந்த பணியாளர்கள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியின் இந்த அதிரடி நடவடிக்கையை கண்டு முருகபக்தர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் மனதார பாராட்டுவதோடு அவரது செயலை வரவேற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

