கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை மஹராஜா கடை காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கே வித்தியாசமான ‘உருவத்தில்’ ‘புள்ளிங்கோ’ பாணியில் ஒரு சிறுவன் சுற்றிக் கொண்டிருந்தார்.


அந்த சிறுவன் காதில் கடுக்கன் அணிந்துகொண்டு, வித்தியாசமான கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைல் வைத்திருந்தான். அதாவது தலையின் பின் பக்கத்தில் ஒரு இடத்தில் மட்டும், பனங்காயை அரிவாளால் கொத்தி விடுவார்களே, அதுபோல அந்த சிறுவன் தலை இருந்தது.
அவன், 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் போல இருந்தது. அதைப்பார்த்த காவல் ஆய்வாளர் அச்சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் கத்தாழை மேடு பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது.
இந்த சிறு வயதில் இப்படியொரு அலங்கோலமான ஹேர்ஸ்டைல் தேவையா என்று நொந்துபோன காவல் ஆய்வாளர் கணேஷ்குமார், சிறுவனை அருகில் இருந்த சலூன் கடைக்கு அழைத்துச் சென்று, சீராக முடிதிருத்தம் செய்து அனுப்பி வைத்தார்.
மேலும் படிக்கிற வயதில் இதுபோன்று ஹேர்ஸ்டைல் வைத்திருக்கக்கூடாது எனவும், உங்கள் கவனம் படிப்பில் மட்டும் இருக்க வேண்டும் எனவும் அச்சிறுவனுக்கு அறிவுரை கூறினார். அரிவாளால் கேக் வெட்டும் ரவுடிகளை கைது செய்வதைப் போலத்தான், இதுவும். பிறரை அச்சுறுத்துவது போன்ற எந்த செயலும் தப்புதான் என்கின்றனர் காவல்துறையினர்.

