தூத்துக்குடி.
2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் மாநில அளவிலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு தேர்தல் வியூகம் வகுத்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆம் ஆண்டு ஆட்சியை விமர்சனம் செய்து எதிர்கட்சிகள் கூட்டமைப்பு பாட்னாவில் முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். அடுத்தக்கட்ட கொள்கை கோட்பாடுகளை உருவாக்குவதற்கு இன்னொரு மாநிலத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் மத்திய அமைச்சர்களாக உள்ள சிலரை மாநில அரசியலுக்கு தலைவராக நியமனம் செய்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் பாஜக யாருடன் கூட்டணி என்பது இன்னும் முழுமையாக முடிவு பெறாத நிலையில் இருந்து வருகிறது.
ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி வேலூரில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது கூட்டாக தேர்தல் களத்தை சந்தித்தது. அதன் பின் அதிமுகவில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சில அணிகள் உருவாகி உள்ளதால் யார் பக்கம் பாஜக உள்ளது என்ற கேள்விக்குறி எழுந்துள்ள சூழ்நிலையில் அவ்வப்போது அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் கணவன் – மனைவிக்கு இடையே நடைபெறும் சிறுசிறு உரசல் போல் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறிய சம்பவத்தையும் பெரிதாக்குகின்றனர் என்று சில சமயங்களில் ஊடகத் துறையினர் மீதும் பாய்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் 25 இடங்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி 39 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று கருத்துக்கள் தெரிவித்து இரண்டு தலைவர்களும் தமிழகத்தில் நாங்களும் இருக்கிறோம் என்று இருப்பிடத்தை காட்டியுள்ளனர். இதற்கு யார் முக்கியம் என்பதை 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் வியூகம் அமைக்கப்பட்டு, சென்னையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுகவின் கட்டமைப்புகளை பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலை எதிர்கொண்டால் திமுக மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி வாக்குகளை பெற்று எளிதில் வெற்றி பெறலாம் என்ற முனைப்புடன் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.
இதற்கிடையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட அரசியல் கள நிலவரங்களையும், திமுகவினர் செயல்பாடுகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.
2024 எம்.பி. தேர்தலில் தூத்துக்குடி எம்பி தொகுதியை அதிமுக மீண்டும் கைப்பற்ற வேண்டும் என சென்னையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியனிடம் 2 மணி நேரம் தீவிர ஆலோசனை செய்த விசயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

