தூத்துக்குடியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் குழந்தைகள் திறன் மேம்பாடு மற்றும் தலைமைப் பண்புக்கான இரண்டு நாள் பயிற்சி தூய லசால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
உருவாகுவோம்; உருவாக்குவோம் என்னும் உயரிய எண்ணத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விப்பணி செய்து வரும் நீம் பவுண்டேசன் சார்பில் தன்னார்வ ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி நடத்தப்பட்டது.
இப்பயிற்சியில் இந்திய அரசியல் சாசனத்திற்குட்பட்டு, குழந்தைகள் தங்களுக்கான உரிமைகள் மற்றும் கடமைகளை உணர்ந்து தங்களது பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து தாங்களே கூடி பேசி திட்டமிடும் தலைமைப் பண்பை வளர்க்கவும் பிரச்சனைகளுக்கான தீர்வு மற்றும் வளர்ச்சிக்கான முயற்சி எடுக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவும் பயிற்றுவிக்கப்பட்டது.
மேலும் குழந்தைகள் பாராளுமன்றங்கள் அமைப்பது குறித்தும் அப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்திய அரசமைப்பு உரிமைக் கல்வி பயிற்சியும், கல்வி – தலைமைத்துவம் – பொருளாதார மேம்பாட்டுக்கான பயிற்சியும் நடத்தப்பட்டது.
தன்னார்வ ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பள்ளிப் பாடங்களை எளிமையாக நடத்துவது குறித்த பயிற்சியை திருச்சி ஊற்றுக்கண் பத்திரிகை ஆசிரியர் எரோணிமுஸ் நடத்தினார்.
அக்கம் பக்கத்து குழந்தைகள் பாராளுமன்றத்தின் நோக்கங்களை விளக்கி, எப்படி அக்கம் பக்கத்து பாராளுமன்றங்களை அமைக்க வேண்டும் என்பது குறித்து அருட்தந்தை எட்வின் ஜான் பயிற்சியளித்தார்.
இந்திய அரசமைப்பு உரிமைக் கல்வி மற்றும் சிறு குறு தொழில் முனைவுக்கான பயிற்சியினை நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் நடத்தினார்.
தூத்துக்குடி மாநகரத்திற்க்குட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து சுமார் 70 தன்னார்வ ஆசிரியர்கள் பங்கெடுத்து பயன்பெற்றனர்.
பயிற்சியின் நிறைவில் நீம் பவுண்டேசன் திட்ட இயக்குநர் நிமிஷா நன்றியுரை கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை நீம் அக்கம் பக்கத்து குழந்தைகள் பாராளுமன்ற இயக்குநர் ரஞ்சித் பிரகாஷ், நீம் கல்விப் பணிகள் இயக்குநர் காட்சியா, பொருளாதார மேம்பாட்டு இயக்குநர் அக்சாரா மற்றும் நீம் பவுண்டேசன் அலுவலக செயலாளர் மாரிதங்கம் சிறப்பாக செய்திருந்தனர்.

