தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் புதிய சாலை பணி நடைபெறாததால் குண்டும், குழியுமான சாலைகளை பயன்படுத்தி வந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் மாவட்ட ஊராட்சி மன்ற நிதியில் இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மாவட்ட கவுன்சிலரும் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளருமான அருண்குமாரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, மாவட்ட ஊராட்சி மன்ற நிதியில் இருந்து இப்பகுதிக்கு புதிய சாலைகள், குடிநீர் திட்டப்பணிகளை செய்து தர வேண்டுமென்று பிரம்ம சக்தியிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, கோரம்பள்ளம் ஊராட்சி கூட்டுறவு வங்கி சாலை 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 600 மீட்டர் புதிய தார்சாலை பணிகளும், அப்பகுதியில் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப்பணிகளும், அன்னை ஸ்கொயர் பிரதான சாலை கிழக்கு, மேற்கு, ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் 240 மீட்டர் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஊராட்சி மன்ற நிதி ஒதுக்கீடு செய்து, தொடங்கி வைத்து மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதியை சார்ந்த முதியவர் ஒருவர் கூறுகையில்: இந்த பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்ட ஊராட்சி மன்ற நிதியிலிருந்து பெற்றுக் கொடுத்து இப்பகுதி வளர்ச்சியடைவதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட கவுன்சிலர் அருண்குமாருக்கும், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி-க்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வபிரபா அதிசயராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் பொன் மாரிசெல்வராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் வினோதா, தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரசாந்த் உள்பட பலர் உடனிருந்தனர்.

