நாகப்பட்டினம் மார்ச் 20
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 246 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளுர், திருக்குவளை ஆகிய வட்டத்திற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த 19 மாற்றுத்திறன் கொண்ட பயனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்காக தலா ரூ.25,000 என மொத்தம் ரூ.4,75,000 மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிக்கான காசோலையினையும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,200 மதிப்பீட்டிலான, தலா ரூ.5,050 மதிப்புள்ள காதொலிக்கருவியினையும், 05 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45,750 மதிப்பீட்டிலான, தலா ரூ.9,150 மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிளையும், நாகப்பட்டினம் வட்டம், ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் த/பெ சேப்பான் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,500- மதிப்பீட்டிலான செயற்கை கால் போன்றவைகளையும், மேலும் வருவாய் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வ.சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

