தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 50-வது வார்டு பகுதியில் பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி மாநகாட்சி ஆணையர் தினேஷ்குமாரிடம் 50வது வார்டு அதிமுக வட்ட கழக செயலாளர் பூர்ணசந்திரன் நேரில் மனு அளித்தார்
அந்த மனுவில் பூர்ணசந்திரன் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளான கணேசன்காலனி, அமுதாநகர், முனியசாமிநகர், சக்திநகர், சாந்திநகர், என்ஜிஓ காலனி, பாரதி நகர், கிருபை நகர் போன்ற பகுதிகளில் கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது. வாரத்திற்கு மூன்று நாட்கள் கொசு மருந்து அடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மழைநீர் வடிகால் அமைக்கும் போது வீட்டின் மதில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதை இதுவரை சரி செய்து கொடுக்கவில்லை. அதனை சரி செய்து தரும்படியும் உரிய நிவாரணம் வழங்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம். அமுதாநகர் முதல் கணேசன்காலனி வரை உள்ள மழைநீர் வடிகாலில் மூடி போட்டு மூடப்படாமல் இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவுகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற கொடிய நோய் உருவாகிறது. இதனை தடுத்திட மழைநீர் வடிகாலுக்கு மூடி போட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும், ஈமசடங்கு செய்வதற்கு பைப் அல்லது கிணறு அமைத்து தரும்படியும், வார்டு முழுவதும் தினந்தோறும் சீரான குடிநீர் கிடைக்கவும், அங்கன்வாடி அமையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித் தர மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் தினேஷ்குமார், 50வது வார்டு பகுதி மக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.
முன்னதாக 50வது வார்டு பொதுமக்கள் சார்பில் அதிமுக வட்ட கழக செயலாளர் பூர்ணசந்திரன் தலைமையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரிடம் 50 வார்டு பகுதியில் அடிக்கடி நிகழும் திருட்டு சம்பவங்களை தடுத்திட கோரியும், சமூக விரோதிகளால் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் அச்சமின்றி வாழ உரிய நடவடிக்கை எடுத்திடவும், இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டியும் மனு அளித்தனர்.

இந்த நிகழ்வில் 50வது வட்ட அம்மா பேரவை செயலாளர் பாலமுருகன், வட்டகழக பிரதிநிதி சேர்மராஜ், இளைஞரணி முருகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், 50வது வார்டு பொதுமக்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

