தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தாளமுத்துநகர் அலங்காரத்தட்டு பாண்டியாபுரத்தில் பெண்கள் ஓருங்கிணைப்புக்குழு நடத்திய அகில உலக பெண்கள் தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வி தலைமை வகித்தார். ஊர் தலைவர் கிருஷ்ணன், பெண்கள் இணைப்பு குழு மாநில செயலாளர் பொன்னுத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல அலங்காரத்தட்டு பெண்கள் இணைப்புக்குழு சக்தி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பங்கேற்று பேசுகையில் பெண்கள் இன்றைக்கு அனைத்து துறைகளிலும் சாதனை நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர். அதற்கு முன்னோட்டமாக 1921ல் நீதிகட்சி ஆட்சியின் போது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. பின்னர் பெரியார், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கல்வி, வேலைவாய்ப்பு, என அனைத்திலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதை கலைஞர் ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த காலத்தில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டத்தை கொண்டு வந்ததின் மூலமாக இன்று அம்மா அப்பா சொத்துகளில் பெண்களுக்கும் பங்கு வழங்கப்படுகிறது. அதே போல் கலைஞர் ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டு வங்கிகள் மூலம் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு சுயமாக தனது சொந்த காலில் நிற்பதற்கு பல உதவிகள் வழங்கப்பட்டன. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மாநகரில் உள்ள பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வேலைவாய்ப்பு உள்ளாட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு சிறந்தமுறையில் பணியாற்றும் இந்த அரசுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டும் உங்களுக்கும் ஆதரவாக ஆண்கள் இருக்கிறார்கள். பெண்கள் குழுவிற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் எந்த உதவிகள் கேட்டாலும் செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.
விழாவில் சமூக ஆர்வலர் வக்கீல் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மேரிஷீலா, முத்து சந்தனம், ஜெயலட்சுமி, அனுசியா, ரோஸ்லின், அமுதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரதநாட்டியம், கோலாட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேல அலங்காரத்தட்டு பெண்கள் இணைப்புக்குழு அந்தோணியம்மாள் நன்றி கூறினார்.

