தூத்துக்குடியில் பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் தர்மராஜ் (58) என்பவர் தூத்துக்குடி தாலுகா மீளவிட்டான் பகுதி 1 சர்வே எண் 250/2A-ல் உள்ள 10 சென்ட் நிலத்தை கடந்த 28.08.2014 அன்று தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பாலசுப்பிரமணியன் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார். தற்போது இந்த நிலம் மேற்படி தர்மராஜ் என்பவரது அனுபவத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் 8வது தெருவை சேர்ந்த கருப்பையா மகன் வானமாமலை (65) மற்றும் தாளமுத்துநகர் மாதா நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கிறிஸ்துராஜ் (61) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி தர்மராஜ் என்பவரது சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் தர்மராஜ் என்பவரது 10 சென்ட் நிலத்தில் மீளவிட்டான் பகுதி 1 கிராம கூட்டுபட்டா எண் 1825ல் உள்ள மேற்படி சர்வே எண்ணில் முக்கியஸ்தரான அந்தோணிராஜ் என்பவர் பெயர் இருப்பதை பயன்படுத்தி,
கிறிஸ்துராஜ் என்பவர் கூட்டு பட்டாவில் உள்ள அந்தோணிராஜ் பெயரில் வாக்காளர் அடையாள அட்டையை போலியாக தயார் செய்து, அதனை உண்மையான ஆவணமாக பயன்படுத்தி முக்கூடல் சார்பதிவாளர் அலுவலக கிரைய ஆவண எண் 854/2021-ன் படி மேற்படி நிலத்தை வானமாமலை என்பவருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மோசடி செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேற்படி தர்மராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்களிடம் புகாரளித்தார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் காமராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணசங்கர், தலைமைக் காவலர் கோதண்டன் மற்றும் முதல் நிலை காவலர்கள் சித்திரைவேல் ஆகியோர் அடங்கிய போலீசார்
(17.03.2023) மேற்படி சொத்தை மோசடி செய்த எதிரி வானமாமலை என்பவரை தூத்துக்குடி அண்ணாநகரில் வைத்தும் மற்றொரு எதிரி கிறிஸ்துராஜ் என்பவரை தாளமுத்துநகர் மாதாநகரில் வைத்தும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

