தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 20.10.1986லிருந்து புது மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் நெல்லையில் இருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கினார். தொடக்கத்தில் இதற்கு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் என்றே பெயரிடப்பட்டது. பின்பு 1997 முதல் இது தூத்துக்குடி மாவட்டம் என பெயர் பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்து விட்டன. அப்போது, தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் என 7 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தற்போது தேர்தல் ஆணையம் மறு சீராய்வு மூலம் வரையறுக்கப்பட்ட பட்டியலின்படி சாத்தான்குளம் தொகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டு 6 தொகுதிகள் செயல்பட்டு வருகின்றன.
ஊடகத்துறையை பொறுத்தவரையில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சி.பா.ஆதித்தனார், அவரது மகன்கள் இராமசந்திர ஆதித்தன், சிவந்தி ஆதித்தன் மற்றும் கே.பி.கந்தசாமி போன்றவர்கள் நாளிதழ்களை தொடங்கி முன்னோடியாக இருந்து தமிழ் மொழிக்கு புகழ்சேர்த்தவர்கள்.
இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் பத்திரிகை துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு அரசின் சார்பில் வீட்டு மனை, குறைந்த வாடகையில் அரசு குடியிருப்பு வீடு வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பல மாவட்டங்களில் பல கட்டங்களாக வீட்டு மனை வழங்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் குறைந்த வாடகையில் அரசு குடியிருப்பு கட்டிடங்களில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 36 ஆண்டு காலத்தில் இந்த 2 திட்டங்களுமே நடைமுறைப் படுத்தவில்லை. 2015-ல் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வீட்டுமனை வழங்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு வழங்கினர்.
அதன் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட சேர்வைக்காரன் மடம் ஊராட்சியில் அரசின் சார்பில் மனை நிலம் ஒதுக்கப்பட்டது. அதன் முன்பகுதி தனியாருக்கு சொந்தமான பட்டா இடம் இருந்தது. அதை அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கூறியதையடுத்து தனிநபர் வைத்திருந்த அந்த இடத்தை சம்பந்தப்பட்டவரிடம் அப்போதைய பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சீனிவாசன், துணை தலைவர் ராஜேஷ், இணைச் செயலாளர் ஜாய்சன் ஆகியோர் சுமூக பேச்சுவார்;த்தை மூலம் தீர்வு கண்டு, 2020 பிப்ரவரி 12ம் தேதி புதுக்கோட்டை பத்திரபதிவாளர் அலுவலகத்தில் தமிழக ஆளுநர் பெயரில் பத்திரபதிவு செய்யப்பட்டது. அப்போது கலெக்டராக இருந்த சந்தீப் நந்தூரி வசம் ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு, அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக இருந்த சீனிவாசனிடம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டபடி ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் பட்டியல் வீட்டு மனைக்கு வழங்கப்பட்டது. அப்போது தாசில்தாராக இருந்த செல்வக்குமார் இதுசம்பந்தமாக பல ஆய்வுகளையும் மேற்கொண்டு, அந்த இடத்தில் 3 செண்ட் வீதம் 71 பேருக்கு வழங்க முடியும் என்று கூறினார்.
கலெக்டர் செந்தில்ராஜ்-க்கு பத்திரிகையாளர்கள் வைத்த கோரிக்கையையடுத்து மேற்கோள் காட்டிய இடத்தில் வீட்டு மனை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு தற்போதுள்ள தாசில்தார் செல்வக்குமாரிடம் கலெக்டர் கூறியதாக தெரிவித்தனர். வீட்டுமனை சம்பந்தமாக கலெக்டர் மற்றும் தாசில்தாரை பலரும் சந்தித்து மனு அளித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வாங்கப்பட்ட மனுக்களில் உள்ள பெயர்கள் விடுபடாமல் அனைவருக்கும் பாராபட்சமின்றி வழங்க வேண்டும். அதன் பின் புதிதாக இந்த துறைக்கு வந்திருப்பவர்களுக்கும் கணக்கெடுக்கப்பட்டு அதே பகுதியில் மற்றுமொரு இடத்தில் அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் இடமும் மற்றொரு பகுதியில் 29 செண்ட் இடமும் உள்ளன. இதை அனைத்தையும் கடந்த அதிமுக ஆட்சியின் போது கொரோனா காலகட்டத்தில் ரூ.3000 ஊக்கத்தொகையும், திமுக ஆட்சி வந்தபின் கொரோனா ஊக்கத்தொகை ரூ.5000 ஊக்கக்தொகையும் வாங்கிய ஊடகத்துறையினரை புறக்கணிக்காமல் அவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் தினசரி நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், பருவ இதழ்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதில் பணியாற்றும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் என பலர் இரவு-பகல் பாராமல் அரசு சார்ந்த தகவல்களையும், சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் சுட்டிக்காட்டி வெளி உலகிற்கு ஊடகங்கள் வாயிலாக எடுத்துச் சென்று அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமூகத்தில் நடைபெறும் சில அவலங்களையும், அரசு அதிகாரிகள் ஒருசிலரின் தவறுகளையும் சுட்டிக்காட்டும் வகையில் செய்திகள் வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கும், அதன் செய்தியாளருக்கும் மிரட்டும் தோணியில் பல்வேறு முட்டுக்கட்டைகளை சிலர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்திதாள் மற்றும் பத்திரிகைகளில் வரும் அரசு திட்டங்கள் தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளாமல் உண்மையான குறைபாடுகள் இருந்தால் அவற்றை களையக் வேண்டும். குறைகள் களையப்பட்டதை பதில் செய்தியாக, அதே ஊடகத்திற்கு அதிகாரிகள் அளிக்க வேண்டும் என பேசியுள்ளார்;.
தமிழக முதல்வரே அரசு நிர்வாகம் மற்றும் ஏனைய அரசு பணிகளில் உண்மையான குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைய வேண்டும் என்று பேசியது, ஊடகத்துறையினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மனமார வரவேற்கின்றனர்.

