*நேற்று (18.02.2023) இரவு ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற வாசல் அருகே மூதாட்டி ஒருவர் தனியாக இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் உரிமையில் நீதிமன்ற நீதிபதி அவர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ் அவர்களுக்கு அளித்த தகவலின்படி உடனடியாக காவல் ஆய்வாளர் அன்னராஜ் உத்தரவின்படி உதவி ஆய்வாளர் திரு. சேவியர் பிராங்க்ளின், முதல் நிலை பெண் காவலர் திருமதி. லதா சுகன்யா மற்றும் பெண் காவலர் திருமதி. மாரியம்மாள் ஆகியோர் மேற்படி இடத்திற்கு சென்று அங்கிருந்த மூதாட்டியை மீட்டு அவரிடம் யார் என விசாரணை செய்ததில் அவர் திருமதி. லிங்கபுஷ்பம் (75) என்பதும், தான் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளார்.*
*இதனையடுத்து ஆத்தூர் தனிப்பிரிவு காவலர் திரு. ஜெபராஜ் ரமேஷிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்படி மூதாட்டியின் அடையாளங்கள் குறித்து தெரிவித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த மூதாட்டி ஆத்தூர் குலவைநல்லூர் பகுதியில் தனியாக வசித்து வருவதும் அவர்களுக்கு மூன்று மகன்கள் இருப்பதும் அதில் ஒரு மகன் முள்ளக்காடு ராஜிவ்நகர் பகுதியில் வசித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.*
*இதனையடுத்து மூதாட்டி லிங்கபுஷ்பம் எழுந்து உட்கார முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்த சூழ்நிலையை அடுத்து மேற்படி முதல் நிலைக் காவலர் லதா சுகன்யா மற்றும் காவலர் மாரியம்மாள் ஆகியோர் மேற்படி மூதாட்டியை ஆட்டோவில் பத்திரமாக தூக்கி வைத்து காவலர் மாரியம்மாள் மூதாட்டியுடன் சென்று முள்ளக்காடு ராஜிவ்நகரில் உள்ள மூதாட்டி லிங்கபுஷ்பம் மகனான உதயகுமார் (55) என்பவரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். காவல்துறையினரின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.*
*மேற்படி மூதாட்டியை மீட்டு, அவரது உறவினரிடம் ஒப்படைத்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய பெண் காவலர்கள் லதா சுகன்யா மற்றும் மாரியம்மாள் உட்பட ஒப்படைக்க உதவிய அனைத்து போலீசாரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.*

