தூத்துக்குடி.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் வட்டார அளவில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அங்கன்வாடி மையத்திலும் கர்ப்பிணிகளை பதிவு செய்து இணை உணவும், கர்ப்ப காலத்தில் முதல் தவணையாக ரூ.2,000, மூன்றாம் மாத முடிவில் ரூ.2,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம், கர்ப்பகால சேவைக்காக இரண்டாம் தவணையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.
நான்காம் மாத முடிவில் ரூ.2,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம், மூன்றாம் தவணையாக அரசு மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கு ரூ.4,000, நான்காம் தவணையாக 3-ஆவது முறை தடுப்பூசி செலுத்திக் கொண்ட தாய்மார்களுக்கு ரூ.4,000, ஐந்தாம் தவணையாக ரூபெல்லா தடுப்பூசி செலுத்திய தாய்மார்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறார். இதுபோன்ற சமுதாய வளைகாப்பு விழா மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 அரசு வழங்கி வருகிறது. மேலும் தமிழக அரசு நகர்புறத்தில் உள்ள பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், உள்ளாட்சியில் 50 சதவீதம் இடஒதுக்கீடு, கலைஞர் ஆட்சியில் மகளிர் உதவிக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு 12 லட்சம் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்து நம்பர் 1 மாநிலம் தமிழகம் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களுக்காக உழைக்கிறார்;. அப்படி இருக்கையில் தங்களின் மெத்தன போக்கால் தமிழக அரசுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள் ஒருசில அதிகாரிகள்.
தூத்துக்குடி ஊரக குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அலட்சிய போக்கினால் பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல்வர் அறிவித்த உன்னத திட்டங்கள் முழுமையாக சென்றடையாததால் பெண்கள் மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், கர்ப்பகால சேவைக்கான தொகை, தடுப்பூசி போடுவர்களுக்கான தொகை, அரசு மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் தொகை என எதுவும் வழங்கப்படாமல் கர்ப்பிணி பெண்களிடம் அலட்சியம் காட்டி வருகிறார்களாம்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்பது போல் கருவுற்ற தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் நலன் கருதி தமிழக அரசு வழங்கி வரும் ஊட்டசத்து பெட்டகத்தை குழந்தை பெற்று பல மாதங்கள் ஆகியும் கொடுக்கப்படவில்லையாம்.
அதுபோல ஏழை-எளிய பெண்களுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஒவ்வொரு சுகாதார மையம் சார்பில் தமிழக அரசு சமுதாய வளைகாப்பு திருவிழா நடத்தி வருகிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படாமல், கண்துடைப்பிற்காக ஒருசில கர்ப்பிணி பெண்களை வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி அரசை ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது.
குக்கிராமத்தில் உள்ள பெண்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் நோக்கமாக உள்ளது. உதாரணத்திற்கு, தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை ஆரம்ப சுகாதர மையத்தின் கீழ் செயல்படும் குலையன்கரிசல் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்ணான ச.அன்னசெல்வம், (பதிவு எண்: 133009650285) 2022ம் அண்டு பிப்ரவரி மாதம் பதிவு செய்துள்ளார். 3 மாத கர்ப்பிணி பெண்ணாக பதிவு செய்த அவர், அரசு விதிமுறைபடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டு, மாதந்தோறும் செக்-அப், அரசு மருத்துவமனையில் பிரசவம் என அனைத்தும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்தும் கர்ப்பிணி பெண்களுக்கான அரசு அறிவித்திருந்த எந்தவொரு நலத்திட்டமும் கிடைக்கப்பெறவில்லையாம். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனிப்பிரிவிற்கு மனு அளித்த பிறகு ஒரு பெட்டகம் மட்டும் கிடைத்துள்ளதாம். வேறு எந்த அரசு சார்ந்த உதவியும் கிடைக்கவில்லையாம்.
ஒரு பானை சோற்றிற்கு ஒரு பருக்கை அரிசி பதம் என்ற பழமொழிக்கேற்ப இந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை தான் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பெண்கள் அனுபவித்து வருகின்றனராம்.
கர்ப்பிணி பெண்களுக்கு அரசு அறிவித்த ஊட்டச்சத்து பெட்டகம், கர்ப்பகால சேவைக்கான தொகை, தடுப்பூசி போடுவர்களுக்கான தொகை, அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கான தொகை என ஏழை-எளிய பெண்களுக்கு முழுமையாக சென்றடையாமல் ஒருசில அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவது பெண்கள் மத்தியில் அரசின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் நிலை உருவாகி வருகிறது.
சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனின்; சொந்த மாவட்டத்தில் அதிகாரிகள் இப்படி அலட்சியப்போக்கு காட்டி வருவது குறித்து எந்த வித அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெறாத பெண்கள் ஒன்றிணைந்து இதுகுறித்து அமைச்சரின் கவனத்திற்கும், மாவட்ட கலெக்டர் கவனத்திற்கும் இந்த விசயத்தை எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்களாம். தமிழக முதல்வரின் சீரிய திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெறாத விசயம் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனும், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அவர்களும் உரிய விசாரணை செய்தால், தவறு செய்த அதிகாரிகளின் பட்டியல் வெளியாகும். அதே நேரத்தில் இதுபோன்ற தவறுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்கவும் உதவும் என கர்ப்பிணி பெண்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.

இந்நிலையில் புதுமைப் பெண் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முறைப்படுத்த அதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
தமிழக முதல்வரின் உன்னத திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் ஒருசில அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கின் அவலத்தால் தூத்துக்குடி பெண்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரின் அதிரடி நடவடிக்கையை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். ஏழை-எளிய கர்ப்பிணி பெண்கள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும்.

