தூத்துக்குடி மாவட்டம் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.
கடந்த 07.02.2021 அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு ஆவரங்காடு நடுத்தெரு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் முத்துமாரியப்பன் (37) என்பவர் கயத்தாறு சொக்கந்திரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாத்துரை மகன் அரிகிருஷ்ணன்(40) என்பவரை முன்பவிரோதம் காரணமாக மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த வழக்கில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரி முத்துமாரியப்பன் என்பவரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான முத்துமாரியப்பன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிவண்ணன் அவர்களும்,
கடந்த 06.02.2021 அன்று திருநெல்வேலி மாவட்டம் வீரமாணிக்கபுரம் புது காலணி பகுதியைச் சேர்ந்தவர்களான சுரேஷ் மகன் சபரிமணி (21), பொன்ராஜ் மகன் முருகபெருமாள் என்ற விக்கி (23) மற்றும் திருநெல்வேலி ஆயுதப்படை கோரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மூக்கையா மகன் சிவசுப்பிரமணியன் (25) ஆகியோர் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு – கோவில்பட்டி செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சபரிமணி, முருகபெருமாள் என்ற விக்கி மற்றும் சிவசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான சபரிமணி மற்றும் முருகபெருமாள் என்ற விக்கி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாரள்களின் அறிக்கையின் அடிப்படையில் 3 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கி. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் மேற்படி எதிரிகளான 1) ஓட்டப்பிடாரம் ஆவரங்காடு நடுத்தெரு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் முத்துமாரியப்பன், 2) திருநெல்வேலி மாவட்டம் வீர மாணிக்கபுரம் புது காலணி பகுதியைச் சேர்ந்தவர்களான சுரேஷ் மகன் சபரிமணி, 3) பொன்ராஜ் மகன் முருகபெருமாள் என்ற விக்கி ஆகிய 3 எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 3 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.
சிறப்பு செய்தியாளர் தூத்துக்குடி ஆத்தி முத்து

