நாகப்பட்டினம் மாவட்டம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சார்பில் 6-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் சித்த மருத்துவ கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் ஜனவரி 09
நாகப்பட்டினம் மாவட்டம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சார்பில் 6-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் சித்த மருத்துவ கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
அகத்தியர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேசிய சித்த மருத்துவ தினமாக நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்த மருத்துவம் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பாரம்பரியமான, மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் பஞ்சபூத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இம்மருத்துவ முறையினில் சிகிச்சைக்கு பற்பம், செந்தூரம், சூரணம், லேகியம், தைலங்களாக பயன்படுத்தப்படுகிறது. அண்மையில் பரவிய தீ நுண்மி (கொரோனா வைரஸ்) கட்டுப்படுத்துவதில் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் போன்ற சித்த மருந்துகள் பெரும்பங்கு வகித்தது.
சித்த மருத்துவத்தின் சிறப்புகளாக வர்ம முறைகள் தொக்கண முறைகள், யோக முறைகள் போன்ற சித்த சிகிச்சைகளை உள்ளடக்கியது. தொற்ற நோய்களுக்கு மிகச் சிறப்பாக சித்தாவிலே சிகிச்சைகளுக்குள்ளது. மகப்பேறு சஞ்சீவி திட்டத்தால் கர்ப்பிணி தாய்மார்கள் பேறுகால நலம் மேம்பட மிக அரிய மூலிகைகளான மருந்துகள் மற்றும் பெட்டகம் , வளரிளம் பெண்களுக்கு இயற்கை பெட்டகம் வழங்கப்படுகிறது
இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், சோரியாசிஸ், வெண்புள்ளி, சிறுநீரக கல், பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்களால் மருத்துவ பரிசோதனை நடத்தி அதற்கான மருந்துகளும், மேலும், நிலவேம்பு பொடி, கபசுரக்குடிநீர், மூலிகை தைலங்கள், மாத்திரைகள் மற்றும் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், மூலிகை செடிகளான ஆடாதோடை, தூதுவளை, கற்பூரவள்ளி, அருகம்புல், மஞ்சல் கரிசலாங்கண்ணி, துளசி, முடக்கறுத்தான் போன்ற பல்வேறு மூலிகை செடிகள் மற்றும் சூரணம், லேகியம், தைலங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
சித்த மருத்துவத்தால் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் சிகிச்சையை பெற்று பயன்பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் சித்த மருத்துவ கண்காட்சியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணி, நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் ஆட்டோக்கள் மூலம் பல்வேறு இடங்களில் வழங்குவதை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகளையும், கர்ப்பிணி தாய்மார்கள், வளரிளம் பெண்களுக்குஇயற்கை நல பெட்டகம் போன்றவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.பத்மநாபன், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீ தேவி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், உதவி மருத்துவ அலுவலர்கள், மருந்தாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

