தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் எழுந்தருளியுள்ளனர். பைரவரின் பிறந்த தினமான மஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவேண்டியும், நோய், நொடிகள், கடன் தொல்லைகள் இல்லாமல் செல்வங்கள் பெருகி வளமாக நலமாக வாழவேண்டியும் ஸ்ரீசித்தர் பீடத்திலுள்ள ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


காலை 8.45மணிக்கு விநாயகர் வழிபாடுடன் துவங்கிய யாக வழிபாட்டில், காலை 10.30மணிக்கு மஹா காலபைரவருக்கு சீனிவாச சித்தர் தலைமையில் பால், பழம், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, குங்கும், நெல், அன்னம், சங்கு, ருத்திராட்சம், தாமரை, புனுகு, அருகம்புல், மலர்கள் உள்ளிட்ட 64 வகையான சிறப்பு அபிஷேகம் பக்தர்கள் திரளாக பங்கேற்க பைரவா போற்றி போற்றி காக்கும் கடவுளே மஹா கால பைரவா போற்றி போற்றி, கருணையின் தெய்வமே காலபைரவா போற்றி போற்றி என பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, மதியம் 12மணிக்கு ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பலவகையான மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகளும், தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட்டது.
சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சீனிவாச சித்தர் வழிபாட்டுக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

