தூத்துக்குடி.
தூத்துக்குடியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி பூங்காவில் முன்னாள் எம்எல்எ பெரியசாமியின் நினைவு நூலகம் அமைக்க கோரி திமுக வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர்நல அணி துணை அமைப்பாளர் சி.பெருமாள் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்-க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழனத் தலைவர் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர், தமிழகத்தில் தொடர்ந்து 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராகவும் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்காக பாடுபட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த அரசு அலுவலகங்களிலும் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலை இல்லை. எனவே, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து கொடுக்க வேண்டுகிறேன்.

மேலும், கலைஞரின் முரட்டு பக்தர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி முன்னாள் நகர் மன்ற தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.பெரியசாமி தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிக்காக 4வது பைப்லைன் திட்டம், புதிய பேருந்துநிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க பாடுபட்டவர். தூத்துக்குடியின் அடையாளமாக திகழும் என்.பெரியசாமி-க்கு தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நினைவு நூலகம் அமைத்து தர, இட அனுமதி பெற்று கட்டிடம் கட்டி, தங்களது இந்த பொற்கால ஆட்சியில் நிறைவேற்றி தர வேண்டி கழக செயல் வீரர்களின் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், என்சார்பாகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

