வேதாரணியம் நவம்பர் 30
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடிசீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பது வழக்கம். கடந்த ஆண்டு முதல் வேதாரண்யம் பகுதியில் உள்ள சில மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், வெளிமாவட்ட மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன் பிடிப்பதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து ஒரு பெரிய படகில் மீனவர்கள், மீன்பிடித்துக் கொண்டு கோடியக்கரை அருகே வந்தனர் இதற்கிடையில் வெளியூர் மீனவர்கள் கோடியக்கரையில் மீன்பிடிப்பதாக தகவல் வந்ததால் வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளும், கடலோர காவல் படை போலீசாரும் கடலுக்குள் படகில் சென்றனர். கோடியக்கரை மீனவர்களும் உடன் சென்றனர். அப்போது நடுக்கடலில் போலீசாருக்கும், பாம்பன் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு இடையே தள்ளு முள்ளுவும் ஏற்பட்டது.


பாம்பன் மீனவர்களுக்கு ஆதரவாக கோடியக்கரை மீனவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகளும், போலீசாரும் கடற்கரைக்கு திரும்பி விட்டனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும துணை கண்காணிப்பாளரிடம் மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா புகார் கொடுத்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிகழ்வு இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

