ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடுகளை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தங்கப்பாண்டி (27) என்பவருக்கு சொந்தமான ஆடுகளை கடந்த 15ம் தேதி அவரது வீட்டின் முன்பு வைத்து வெள்ளூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் அருண்குமார் (27) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வைத்து திருட முயற்சிக்கும்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
இதுகுறித்து தங்கப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேவியர் பிராங்க்ளின் வழக்குப்பதிந்து, அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்த திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.
கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 5 வழக்குகளும், ஏரல் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 4 வழக்குகளும், ஆலங்குளம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

