திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒன்பது நாளும் கோவிலில் விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 10-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி அளவில் தேரோட்டம் நடந்தது.

வழக்கமாக மாசித்திருவிழா தேரோட்டத்தின்போது பெரிய தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானையுடனும், பெரிய தேரைவிட சற்று சிறிய தேரில் தெய்வானை அம்பாளும், சிறிய தேரில் விநாயகரும் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவார்கள். இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2 பெரிய தேர்களையும் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் 3 சிறிய தேர்களில் எழுந்தருளி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

11-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு செல்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு இரவில் அபிஷேகம், அலங்காரமாகி, சுவாமி- அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

