தூத்துக்குடி மாவட்டத்தில்; உள்ள உலக பிரசித்திப் பெற்ற ஆன்மிக தலமாகவும், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் திருச்செந்தூர் முருகன் கோவில் இருந்து வருகிறது. திருச்செந்தூருக்கு மாசி மகம், வைகாசி விசாகம், தை பூசம் ஆகிய நாட்கள் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் முருக பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் வருகை தருவது வழக்கம். குறிப்பாக, தேனி, மதுரை, ராமநாதபுரம், அருப்புகோட்டை, காரைகுடி போன்ற ஊர்களில் இருந்து அதிகளவில் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு செல்கின்றனர்.

நெடுந்தூரம் பயணம் செய்து பாதயாத்திரை வரும் முருக பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு தூத்துக்குடியை கடக்கும் போது ஓய்வெடுக்க வசதியேதும் இல்லாமல் சாலையின் ஓரங்களில் தங்கி, இளைப்பாறி வருகின்றனர்.
திருச்செந்தூர் பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்கள் சிரமம் நீங்கிடவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்திட பல ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்கள் பலர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற கலைஞரின் முரட்டு பக்தர் பெரியசாமியின் மகன் ஜெகன் பெரியசாமி ஆன்மிகவாதிகளின் கோரிக்கையை தனது தந்தை பாணியில் நிறைவேற்றும் வகையில் பக்தர்களின் நலனுக்காகவும், தூத்துக்குடி மக்களின் வேண்டுகோளையும் ஏற்று தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கி மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
முருக பக்தர்களின் நலன் கருதி மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்து, நிறைவேற்றிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை பாரத திருமுருகன் திருச்சபை மாநில தலைவர் முருகனடிமை வாரியார் சீடர் சி.ஏ.வி.பி.மோகனசுந்தரம் 19.10.2022 அன்று நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, கோரிக்கை மனுவை அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வள்ளலார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் ஆன்மிகத்திற்கு எதிரானவன் அல்ல என்று சுட்டிக்காட்டி ஆன்மிகத்திற்கு வழிகாட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியை பின்பற்றியும், கலைஞரின் முரட்டு பக்தர் பெரியசாமியின் ஆன்மிக பணியை பின்பற்றி வரும் அவரது மகன் ஜெகன் பெரியசாமி, இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதை கருத்தில் கொண்டு, பக்தர்கள் நலன்கருதி, தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை ரவுண்டான உப்பாத்து ஓடை பக்கம் மாநகராட்சிக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை பக்தர்கள் வசதிக்காக ஓய்வு அறை, குளியலறை, கழிப்பறை வசதியுடன் கூடிய பூங்கா மற்றும் அதனருகில் சிறிய குளம் அமைத்திட மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.

தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்கள் இளைப்பாற சிறந்த இடத்தை மேயர் தேர்வு செய்துள்ளார்.
அருள்மொழியரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் துவக்கப்பெற்ற பாரத திருமுருகன் திருச்சபை சார்பிலும், எனது சார்பிலும் கோடிக்கணக்கான முருக பக்தர்கள் சார்பிலும் நன்றியுடன் கூடிய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சேவை மூலம் தமிழகத்திற்கே முன் உதாரணமாக மேயர் ஜெகன் பெரியசாமி திகழ்ந்து வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறோம். மேலும் வருகிற தை பூசத்திற்கு பாதயாத்திரை வரும் முருக பக்தர்கள் இளைப்பாறும் வகையில் பணிகள் விரைந்து முடிக்க ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த பணிகளை தாங்கள் திறம்பட செய்ய எம்பெருமான் முருகன் நீண்ட ஆயுளை தங்களுக்கு தர வேண்டுமென கந்தவேலனை இந்த வேளையில் வேண்டுகிறோம் என திருமுருக திருச்சபை மாநில தலைவர் மோகனசுந்தரம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாரத திருமுருகன் திருச்சபை மாவட்ட அமைப்பாளர் சிவ.மா.தங்கராஜ், முருகன் சாமி, பொன்சிங், இலங்கோ மற்றும் முருக பக்தர்கள் பலர் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு
எம்.ஆத்தி முத்து
போலீஸ் செய்தி நியூஸ்

