தூத்துக்குடி ஆசிரியர்கள் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் –
வெளிவராத பகிர் தகவல் – நாசரேத் டயோசீசனில் பரபரப்பு
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலம் எஸ்டிகே.ராஜன், டி.எஸ்.எப் என்று இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. திருமண்டல தேர்தல் நடத்தப்பட்டதில் டிஎஸ்எப் அணி வெற்றி பெற்றது. அதற்கு முன்னதாக எஸ்.டி.கே.ராஜன் அணியே பொறுப்பில் இருந்தது. இரண்டு அணிகளும் நிர்வாக பொறுப்பிற்கு வர போட்டிப்போட்டுக் கொண்டிருந்த நிலையில் இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி தற்போது டிஎஸ்எப் அணி வசம் நிர்வாகம் சென்றது.
இந்தநிலையில் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டத்திற்குட்பட்ட விக்டோரியா CBSC பள்ளியின் முன்பு ரோட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் சென்று அங்கு உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
போராட்டம் குறித்து அவர்களில் சிலரிடம் பேசினோம். அவர்கள், ‘தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட விக்டோரியா CBSC பள்ளி நிர்வாகம் தற்சமயம் பழைய நிர்வாகிகளிடம் இருந்து மாறி உள்ளது. புதிய DSF குரூப் இப்பொழுது நிர்வாகம் செய்ய துவங்கியுள்ளது. இதனால் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர், வாட்ச்மேன், மற்றும் ஹெல்பர்ஸ், யாருக்கும் இரண்டு மாதம் சம்பளம் வழங்கவில்லை.
புதிதாக வந்துள்ள நிர்வாகிகள் சேர்மனாக தமிழ்ச்செல்வன் ஐயர், தாளாளராக. இன்ஸ்டின், ஆகியோர்கள் பள்ளியில் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள், இந்தப் பள்ளி கடந்த நிர்வாகிகளின் காலத்தில் தொடங்கப்பட்டது. தொடங்கி நான்கு வருடங்கள் ஆகிறது அதனால் அங்கு பணி புரியும் தலைமையாசிரியர், ஆசிரியர் இவர்கள் அனைவரையும் பழைய நிர்வாகிகள் அப்பாயின்மென்ட் செய்துள்ளார்கள். ஆகவே இவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களுக்கு இரண்டு மாத சம்பளமும் வழங்காமல் பழிவாங்கி வருகிறார்கள்.
பள்ளியில் போதுமான அளவுக்கு அதிகமான வருமானமும் வருகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு தேவைக்கு அதிகமாகவே பணம் உள்ள நிலையில் 2 மாதமாக எங்களுக்கு ஏன் சம்பளம் வழங்கப்படவில்லை என்று பல குற்றச்சாட்டுக்களை சொல்லி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். திடீரென நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட இந்த பள்ளியில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்த காரணமென்ன என்று திருமண்டல நல விரும்பிகள் சிலரிடம் விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப் பெற்றது.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தனக்கு தானே ஊதியத்தை உயர்த்தி கொண்டதாலும், தனக்கு நெருக்கமான ஆசிரியர்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி எடுத்துக்கொண்ட விசயம் தணிக்கையில் தெரியவந்து விடுமோ என்ற அச்சத்தில் தலைமை ஆசிரியர் தன் தவறை மறைக்க இப்படி ஆசிரியர்கள் சிலரை போராட்டம் என்ற பெயரில் பலிகடா ஆக்க முயற்சிக்கிறார் என்கிற குற்றசாட்டும் பூதாகரமாக கிளம்பி உள்ளது.
மேலும் அவர்கள் கூறும் போது, ஆட்சிமன்ற குழு ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு நடவடிக்கையும் திருமண்டலத்தில் செய்ய முடியாது என்பது மூலச்சட்ட விதிகளாகும். அதன்படி பழைய நிர்வாகத்தினர்(எஸ்.டி.கே.ராஜன் அணியினர்) இந்த பள்ளியின் முதல்வருக்கு ரூ.40 ஆயிரம் மாதச் சம்பளம் நிர்ணயம் செய்திருக்கிறார்களாம்.
ஒருசில ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் எனவும், மேலும் ஒருசில ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் என மாதச்சம்பளம் நிர்ணயம் செய்து ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் பழைய நிர்வாகத்தால் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பழைய நிர்வாகத்தின் பதவி காலம் முடியும் நேரத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதன்படி தான் சம்பளம் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்க பட வேண்டும். ஆனால் அந்த நடைமுறை தற்போது கடைபிடிக்காமல் முற்றிலும் ஆட்சிமன்ற குழு விதிமுறை மீறப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
இந்தநிலையில் 2 அணிகளுக்கும் இடையே தேர்தல் நடைபெற்று, பின்னர் அதில் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்ற தீர்ப்பில் டிஎஸ்எப் அணியினர் நிர்வாகத்தை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி கடந்த 2 மாதங்களாக புதிய நிர்வாகிகள் திருமண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 300க்கு மேற்பட்ட பள்ளிகள் இருக்கின்ற நிலையில் தொடர்ந்து ஆட்சி மன்ற குழு கூட்டம் நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் தான் 10.10.2022 அன்று விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியின் ஆட்சி மன்ற குழு கூட்டம் மதியம் 1 மணிக்கு கூடுவதாக இருந்துள்ளது. இந்த கூட்டத்தில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சம்பளம் குறித்தும், பள்ளியின் வளர்ச்சிகள் குறித்தும் விவாதிக்கப்படவிருந்த நிலையில் திடீரென ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
மேலும், இப்பள்ளியில் தணிக்கை குழு கடந்த 10 தினங்களாக வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து வருகிறது. அதுசம்பந்தமாக மேற்கொண்டு விசாரிக்கும்போது, ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் வங்கி மூலமே ஊதியம் வழங்கப்பட்டு வந்துள்ளது. 2022 ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பள்ளி முதல்வர் தன்னிச்சையாக தனது சம்பளத்தை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக ஒரே நேரத்தில் உயர்த்தியும், தனக்கு வேண்டிய ஒருசில ஆசிரியர்களுக்கும் சம்பளம் உயர்த்தியதோடு வங்கி மூலம் ஊதியம் கொடுக்கும் விதிமுறையை தானாகவே மாற்றிக்கொண்டு, நேரடியாக பள்ளி மாணவர்கள் கட்டணத்தில் இருந்து சம்பளத்தை ரொக்கமாக எடுத்துக் கொண்டுள்ளார் என்ற குற்றசாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
நிர்வாகிகள் யாரிடமும் கலந்து பேசாமலும், ஆட்சிமன்ற குழு அனுமதி இல்லாமலும் தன்னிச்சையாக ஒரே நேரத்தில் ரூ.35 ஆயிரம் சம்பளத்தை உயர்த்தி தனக்குத்தானே எடுத்துக் கொண்டது தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தின் விதிமீறல் ஆகும் என்கின்றனர்.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சிலர் தெரிவித்ததாவது: சம்பளம் நிர்ணயம் செய்வது தாளாளருக்கும், மேலாளருக்கும் மட்டுமே உரிமை உண்டு. தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டமும் அந்த அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால் இந்த பள்ளியில் நடந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உறவினர்கள் சேர்ந்து அதிக சம்பளத்தை வழங்க வேண்டுமென நிர்வாகிகளை மிரட்டி நிர்பந்தம் செய்வது கேளிக்கூத்தாக்கி உள்ளது. மேலும், தலைமையாசிரியர் தன்னிச்சையாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவருகிறது. பள்ளியில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி பள்ளி தணிக்கை குழு விசாரணையில் தெரியவந்து விடுமோ என்ற பயத்தில் அப்பாவி ஆசிரியர்களை திசைதிருப்பி போராட்டத்தில் ஈடுபட வைத்து மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கல்வித்துறை உயர் அலுவலர் காவல்துறை அதிகாரிகள் இணைந்து இதுபோன்ற போராட்டங்களை தூண்டுபவர்கள் யார் என்பதையும், இதன் பின்னணிகள் என்ன என்பதையும் தன் தவறை மறைப்பதற்காக ஆசிரியர்களை தவறான வழிநடத்துபவர்கள் யார் என்பதையும் அடையாளம் கண்டு ஒருமுழுமையான விசாரணை நடத்தி இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர் திருமண்டல நலவிரும்பிகள்.
பல மிஷினரிகளின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட டயோசீசன் பள்ளி நிர்வாகம் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தனது தவறை மறைப்பதற்காக ஒட்டமொத்த டயோசீசன் நிர்வாகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமண்ட நலவிரும்பிகள் வேண்டுகோள் வைக்கின்றனர். இந்த விசயத்தில் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, காவல்துறை இணைந்து தீர்வு காண வேண்டும்.
இந்த பள்ளியில் நடைபெறும் தணிக்கை குழு அறிக்கை வெளிவந்தவுடன் பல உண்மைகள் வெளிவரும் என்கின்றனர்.

