தூத்துக்குடி, அக்.12
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைப்பட்டியை சேர்ந்த 54 பேர் கடந்த 03.10.2022 அன்று பூண்டி மாதா ஆலயத்தை தரிசனம் செய்ய சென்ற அவர்கள் திருச்சி மாவட்டம் கொல்லிடம் ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி சிலுவைப்பட்டியை சேர்ந்த சார்லஸ், பிரித்விராஜ், தாவீதுராஜா, ஈசாக், பிரவீன்ராஜ், ஹெர்மஸ் உயிரிழந்தனர்.
சம்பவம் நடைபெற்றதையொட்டி அக்குடும்பத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தி.மு.க. கட்சி நிதியாக தலா ஒரு லட்சம் வீதம், ஆறு குடும்பத்திற்கும் ஆறு இலட்சம் வழங்கி உடல் தகனம் செய்வதற்கு ஒரு லட்சம் என ஏழு லட்சம் வழங்கிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறு பேர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் வீதம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உயிரிழந்த குடும்பத்தினரிடம் மூன்று லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், தாசில்தார் செல்வகுமார், சிலுவைப்பட்டி பங்கு தந்தை நெல்சன், மாநில மாணவரனி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாச்சலம், இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழலணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தொம்மை சேவியர், அந்தோணி தனுஸ்பாலன், நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பரிசமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், தங்கபாண்டியன், ஸ்டாலின், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன், மாவட்ட பிரதிநிதி நெல்சன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் ராமர், பிரபாகர், ஜோஸ்பர், கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

