நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 27 நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது . தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான “கோ-ஆப்டெக்ஸ்” கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி இரகங்களை இந்தியா முழுவதும் உள்ள “கோ-ஆப்டெக்ஸ்” விற்பனை நிலையங்கள் மூலமாக அனைவரும் பயன்பெறும் வகையில் விற்பனை செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது.


காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் “கோ-ஆப்டெக்ஸ்” சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.1400.00 இலட்சம் விற்பனை குறியீடாகவும், அதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் விற்பனை நிலையத்திற்கு ரூ.60.00 இலட்சமும்; விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களின் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.
தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு. எனவே, அனைத்து துறை ஊழியர்களுக்கும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மண்டல மேலாளர் தா.ரமணி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் நாகப்பட்டினம் விற்பனை நிலையம் மேலாளர் கு.சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

