வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி
வேளாங்கண்ணி செப்டம்பர் 7
நாகப்பட்டினம் மாவட்டம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி நடைபெற்றது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும் சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலாத் தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது.
கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது.

கிறிஸ்துவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். வங்கக் கடலோரத்தில் இந்தப் பேராலயம் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்திற்கு வெளிநாடு வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து மாதாவை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த பேராலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும் இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். கொரோனா
ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தத் திருவிழா
சிறப்பாக நடைபெறவில்லை.


ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு
ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து ஆலயத்தை வந்தடைந்தது. முன்னதாக காலையில் தமிழ், மராத்தி, கொங்கணி மலையாளம், ஆங்கிலம் ,இந்தி மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. மாலையில் கன்னடத்தில் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மறையுரை நற்கருணை ஆசீர் உடன் பெரிய தேர்பவனியானது நடைபெற்றது. நாளை
(8.ம் தேதி வியாழக்கிழமை)
அன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர் நன்றி அறிவிப்பு நடைபெறுகிறது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

