தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்தும், விசாரணையில் உள்ள வழக்குகளில் விரைந்து சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது குறித்தும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் நீதிமன்ற அலுவல்புரியும் காவல் ஆளினர்கள் ஆகியோர்களுடன் இன்று (30.07.2022) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டா திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை விரைந்து முடிப்பதற்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் குற்ற வழக்குகளில் நீதிமன்ற அலுவல்களை சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலர்கள் குரும்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீதரன், தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் ஞானமுத்து, எப்போதும்வென்றான் காவல் நிலைய தலைமை காவலர் டேனியல் ராஜாசிங் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு, தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் சத்யராஜ், ஸ்ரீவைகுண்டம் மாயவன், கோவில்பட்டி வெங்கடேஷ், விளாத்திகுளம் பிரகாஷ், திருச்செந்தூர் ஆவுடையப்பன், மணியாச்சி சங்கர், சாத்தான்குளம் அருள் உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

