தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஸ்ரீவைகுண்டத்தில் மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, “என்னுடைய தொழில் விவசாயம். அதைத்தான் நான் சொல்லி வருகிறேன். ஆனால் அதனை ஸ்டாலின் மாற்றிச் சொல்கிறார். ஸ்டாலின் வேண்டுமென்றே அரசை குறை கூறி வருகிறார். விவசாயிகள் விவசாய தொழிலாளிகள் ஆகியோர் பஞ்சத்தைப் போக்க கூடியவர்கள். விவசாய தொழில் பிரதான தொழில். அது வளர வேண்டும் என்பதற்காக தான் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
வறட்சியால், மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதற்கான கடனை தான் நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். அதில் என்ன தவறு. முதல்வரை விஷக்கிருமி என்று ஸ்டாலின் கூறுகிறார். திமுக ஆட்சிக் காலத்தில் மக்களை பற்றி சிந்திக்காத திமுக அரசு தற்போதுஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பெட்டியை தூக்கிக் கொண்டு வருகிறார். நாட்டு மக்களைப் பற்றி நினைக்காத கட்சிதான் திமுக. ஆனால் அதிமுக அரசு எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் ஆகியோர் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு தீர்வு கண்டு வருகிறார்கள்.
9,70,000 மனுக்கள் அதிமுக சார்பில் வாங்கப்பட்டது. அதில் 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கிடைத்தது. கரோனா தொற்று காலத்தில் அதிமுக அரசு மக்களைக் காத்தது. கரோனா காலத்தில் ஆயிரம் வழங்கியது அதிமுக அரசு. தை பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக ரூ.2500 பொங்கல் பரிசாக வழங்கியது. கிராமத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயத் தொழிலாளிகள் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக கட்சி. ஏரிகள் பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரப்படுகிறது.
வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை பெய்ததால் அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளது. மக்களின் வாழ்க்கை தரம் உயர அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படுகிறது. அதற்காக தமிழக அரசு விருது பெற்றுள்ளது. நீட் தேர்வில் இந்தாண்டு மட்டும் 435 பேர் மருத்துவராக உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பெரியதாழையில் 55 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் சாத்தான்குளம் பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் பகுதில் 6 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளன.திமுக ஆட்சியில் ஒன்னும் கிடையாது. தண்ணீர் வீணாவதைத் தடுக்க தாமிரபணி ஆற்றில் ஆழ்வார்திருநகரி பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் இருந்த மின் தடை மாற்றி தற்போது மின் மிகை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது திமுக அராஜகத்தில் ஈடுபடுகிறது. ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. எனவே அனைவரும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள்!” என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

