சென்னை, ஜுன் 29.
பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’-பத்திரிகையாளர் நல வாரியத்தின் 2-வது கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசினார்.
மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நேற்று (28.06.2022) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, பள்ளிக் கல்வித் துறைக் கூட்ட அரங்கில், பத்திரிகையாளர் நல வாரியத்தின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமையேற்ற மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் தமது உரையில் தெரிவித்தாவது:
‘இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் நல வாரியக் கூட்டத்தில் பல்வேறு விவாதங்களை எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் பத்திரிகையாளர்களின் பிரச்சனைகளுக்குத் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, பத்திரிகையாளர்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் உள்ளது. இக்கூட்டம் குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் என்று சொன்னாலும்கூட, பத்திரிகையாளர்களின் நலன் கருதி தேவைப்படும் சமயத்தில் இக்கூட்டத்தை முன்னரே கூட நடத்தலாம். இக்கூட்டத்தில் வைக்கப்பட்ட பொருண்மைகள் முழுவதுமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு முடிவு எடுத்து, அதன் பிறகு உங்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறிந்து பரிசீலனை செய்வதைவிட, அதை வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே உங்களிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சிக்குரியது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அமைக்கப்பட்ட பத்திரிகையாளர் நல வாரியம் பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு வகையில் பயனளிப்பதாக உள்ளது. பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’ எனத் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருண்மைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் மற்றும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் (செய்தி) தி.அம்பலவாணன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களான தினத்தந்தி குழுமத்தின் இயக்குநர் சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன், தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தி வீக் வார இதழின் முதன்மை சிறப்புச் செய்தியாளர் லெட்சுமி சுப்பிரமணியன், தீக்கதிர் நாளிதழின் செய்தியாளர் எஸ்.கவாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர் எம்.ரமேஷ், அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு: எம்.ஆத்திமுத்து
தலைமைச் செயலக செய்தியாளர்.

