சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வருடந்தோறும் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து நேற்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை இணைந்து 32வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நேற்று கிருஷ்ணாபுரம் முத்து மஹாலில் வைத்து நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் மது அருந்திவிட்டு சாலையில் வாகனங்கள் இயக்கக் கூடாது எனவும் முறையாக சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து அனைவரும் தெரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்றும் சாலையில் பயணிக்கும் போது சிக்னலை மதித்து நடக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். சாலை பாதுகாப்பு மாதம் மட்டும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பது அல்ல அனைத்து நாட்களுமே சாலை விதிகளை மதித்து அதனை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜூ, திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ், ஆயுதப்படை ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
