நாகையில் மீனவர் குறைதீர்நாள் கூட்டம்
நாகை மே 17
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், எம்.எல்.ஏக்கள் நாகை முகமது ஷா நவாஸ், கீழ்வேளுர் நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மீன் வளம் மற்றும் மீனவர்களின் நலனை மேம்படுத்திட அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கு தேவையான புரதச்சத்து மிகுந்த உணவு வழங்குவதில் மீன்வளம் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகவே, மீனவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், கடலோர உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்து அவர்களது வாழ்வு முன்னேற்றமடைய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட ஏதுவாக மீனவர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் 52 மீனவ பயனாளிகளுக்கு 40 சதவீத மானியத்தில் மொத்தம் ரூ.41,08,052 (ரூபாய் நாற்பத்தோரு இலட்சத்து எட்டாயிரத்து ஐம்பத்து இரண்டு மட்டும்) மதிப்பீட்டில் வெளிபொருத்தும் இயந்திரங்களை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மீனவர் விபத்து குழு காப்புறுத் திட்டத்தின் கீழ் பல்வேறு விபத்து நிகழ்வுகளில் மரணமடையும் மீனவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு காப்பீட்டிற்கான இழப்பீடு தொகை ஒரு பயனாளிக்கு ரூ.5 இலட்சம் வீதம் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மீனவர் நலவாரிய நிவாரணத் திட்டத்தின் கீழ் விபத்து நிகழ்வுகளில் மரணமடைந்த மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2,02,500 வீதம் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6,07,500 (ரூபாய் ஆறு இலட்சத்துஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் ஜாய்ஸ் ஆலிவ் ரேச்சல், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் ஜெயராஜ், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கடல் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், உறுப்பினர்கள், உள்நாட்டு மீனவர்கள், இறால் வளர்ப்பு விவசாயிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

