நாகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் அரு்ணதம்புராஜ் ஆய்வு
நாகை மே 6
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் மேல்நிலை பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று (06.05.2022) முதல் துவங்கி 30.05.2022 முடிய நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 136 பள்ளிகளிலிருந்து 4517 மாணவர்களும் 4467மாணவிகளும் ஆக மொத்தம் 8984 பள்ளி தேர்வர்கள் 41 மையங்களில் தேர்வு எழுத உள்ளார்கள். இதில் 118 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வுஎழுதுகின்றனர். அவர்களில் 81 பேர் கண் பார்வையற்றவர்கள். அவர்களுக்கு சொல்வதை எழுதுவதற்காக ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். மேலும் வினாத்தாள் எடுத்து செல்வதற்கும் விடைத்தாள்களை திரும்ப எடுத்து வருவதற்கு 10 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, காற்றோட்டம், வெளிச்சம, கழிவறைவசதி, தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் எந்த வித சிரமமும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுத் தேர்வுகள் பணியில் தலைமையாசிரியர்கள் பணி நிலையில் 84 நபர்களும், ஆசிரியர்கள் பணிநிலையில் 1200 நபர்களும், அலுவலக பணியாளர்கள் நிலையில் 320 நபர்களும் 110 காவல் துறை சார்பான காவலர்களும் ஆக மொத்தம் 1714 நபர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக 50 நிலையான படைகளும் 20 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. இவ்வறிவுரைகள் மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி, இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித்தேர்வு மையத்தினை இரத்துசெய்தும், பள்ளி அங்கீகாரத்தினை இரத்து செய்திட பள்ளிக்கல்வி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்குப் பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வர்கள் தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவது குற்றமாகும். ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட தேர்வர்கள் அன்றைய தேர்வினை தொடர்ந்து எழுத இயலாது. தொடர்ந்து வரும் இதர தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிகளின் படி உரிய தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இவ்வாய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்

